பேருந்து நிலையத்தில் இலவச கழிப்பறை அமைக்க கோரிக்கை
முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் இலவச கழிப்பறை அமைப்பதற்கு பேரூராட்சி நிர்வாகத்திடம் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். முதுகுளத்தூர் பேருந்து நிலையம் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் வந்து செல்லும் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படுவதோடு, தொற்றுநோய்கள் பரவுவதற்கும் வாய்ப்பாக உள்ளது. பொது இடத்தில் சிறுநீர், மலம் கழிப்பதால் கடைகளுக்கு பொருள்களை வாங்க வரும் வாடிக்கையாளர்கள் முகம் சுளித்து செல்கின்றனர்.
எனவே பொதுமக்களின் நலன் கருதி இலவச கழிப்பறை வசதியை ஏற்படுத்தி கொடுக்குமாறு பேரூராட்சி நிர்வாகத்திடம் முதுகுளத்தூர் வர்த்தக சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.