பாதை அமைத்த தகராறில் வெட்டு: இருவர் கைது
முதுகுளத்தூர் அருகே சாமி கும்பிட பாதையை சீர் செய்தபோது ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா வைத்தியனேந்தலில் ஸ்ரீ அரியநாச்சி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆடித் திருவிழாவை கொண்டாட கிராம மக்கள் சாலையோரங்களில் இருந்த முள்வேலிகளை இயந்திரங்களை கொண்டு அகற்றும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர். இந்நிலையில் வைத்தியனேந்தலைச் சேர்ந்த குருசாமி (55) இடத்தில் உள்ள வேப்ப மரத்தை வெட்ட அவர் எதிர்ப்புத் தெரிவித்தாராம். அப்போது ஏற்பட்ட தகராறில் குருசாமி கத்தியால் வெட்டப்பட்டார். இதில் படுகாயமடைந்த அவர் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுதொடர்பாக முதுகுளத்தூர் காவல்நிலையத்தில் குருசாமி கொடுத்த புகாரின் பேரில் சகோதரர்களான முனியசாமி, யோகானந்தம் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.