பரமக்குடி-முதுகுளத்தூர் புறவழிச்சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
பரமக்குடி-முதுகுளத்தூர் செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலப் பணி நடைபெற்று வருவதால் அவ்வழியே செல்லும் பேருந்துகள் இமானுவேல் சேகரன் நினைவிடம் செல்லும் புறவழிச் சாலையில் திருப்பிவிடப்பட்டுள்ளன. இச்சாலையோரம் மிகவும் சேதமடைந்து காணப்படுவதால் அதனை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பரமக்குடியிலிருந்து முதுகுளத்தூர் செல்லும் சாலையில் ரூ. 37 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த நவம்பர் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. இப்பணி துவங்கியவுடன் அவ்வழியாக முதுகுளத்தூர், சாயல்குடி, திருச்செந்தூர், வேம்பார் ஆகிய பகுதிகளுக்குச் சென்ற பேருந்துகள் முதுகுளத்தூர் சாலையிலிருந்து போடப்பட்ட புறவழிச்சாலையில் செல்லும் வகையில் உத்தரவிடப்பட்டது.
இச்சாலை வேந்தோணி கண்மாய் மற்றும் கால்வாய் பகுதியில் குறுகிய நிலையில் உள்ளதால் அச்சாலையின் இருபுறமும் போடப்பட்டிருந்த மண் சரிந்து பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
மேலும் சாலை குறுகி காணப்படுவதால் எதிரே வரும் வாகனங்கள் ஒன்றையொன்று கடக்கும் போது ஆபத்தான நிலையில் செல்லவேண்டிய நிலை உள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் சாலையை சீரûமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.