கவிஞர் காவிரிமைந்தன் – ஒரு அறிமுகம்
Ravichandran M (alias) KAVIRIMAINDHAN
காலமகள் ஈன்ற கவிதைக் கோமகன் கண்ணதாசன் புகழதனையே
நாளும் பொழுதும் நெஞ்சிலேந்தி வாழும் நம் காவிரிமைந்தன்!
தமிழகத்தின் தலைநகரில் கவியரசர் திருவுருவச்சிலை அமைத்த
பெருமைக்கு வித்திட்டவர்! வேரானவர்! வெற்றி கண்டவர்!
வாழ்க்கை முழுவதும் கண்ணதாசன் புகழ்பாட தன்னையே அர்ப்பணித்தவர்!
காவிரிமைந்தன் கவிதைகள் என்னும் தனது முதல்கவிதை
நூலினை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் கரங்களால்
15.12.1990ல் வெளியிட்டு தனது இலக்கியப் பயணத்தைத் தொடங்கியவர்!
தான் மட்டும் கவியெழுதிப் புகழ்பெறுதலைவிட.. பலரையும்
எழுதவைத்து உயர்த்திட வேண்டும் என்கிற உந்துதலின் காரணமாய்
உதயமாக்கினார் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கத்தை – பம்மலில்!
1991முதல் ஆண்டுகள் 22 ஆக சென்னையில் இயங்கிவரும் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கத்தின் நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளர்!
இதுதவிர, இவரது முயற்சியில் உருவான கண்ணதாசன் விஸ்வநாதன் அறக்கட்டளையில் அறங்காவலர்.. மற்றும் இணைச் செயலாளர்!
1992ல் இவர் நிறுவிய கவியரசு கண்ணதாசன் விருதுகள் இதுவரை 65 கலைஞர்களுக்கு மேல் வழங்கப்பட்டுள்ளன!
கண்ணதாசன் புகழ்பாடும் இவர்தம் பணிகள் ஏராளம்!
கவியரசு கண்ணதாசன் பாடல்கள் காலத்தின் பதிவுகள் என்கிற நூலினை 80பாடல்கள் பற்றிய தொகுப்பாக கவிஞர்தம் 80ஆம் பிறந்தநாளில் வெளியிட்டு அன்புக் காணிக்கையாக்கினார்.
கவியரசு கண்ணதாசன் பாடல்கள் காலத்தை வென்றவை என்கிற நூல் தற்போது வானதி பதிப்பகத்தில் அச்சிலிருக்கிறது!
2011ல் வாழும் தமிழே வாலி என்கிற நூலினை குமரன் பதிப்பகம் சார்பில் வெளியிட்டார்!
பொற்காலப் பாடல்களின் பூக்கோலங்கள் என்கிற தலைப்பில் நூல் ஒன்று உருவாகி வருகிறது!
நேரம் + நிர்வாகம் = வெற்றி என்கிற தலைப்பில் நூல் ஒன்று கங்கை பதிப்பகத்தார் வெளியிட உள்ளனர்!
சென்னை வானொலி நிலையத்தில் நான்கு ஆண்டுகள் கண்ணதாசன் சிறப்பு நிகழ்ச்சிகள் வழங்கியவர்!
அமீரகத்தில் 2006முதல் 2011வரை உங்கள் சக்தி பண்பலை வானொலியில் கண்ணதாசனின் பாட்டுத்தேரோட்டம் நிகழ்ச்சியை ஆண்டுதோறும் கவியரசர் பிறந்தநாளில் இரண்டு மணி நேர நிகழ்வாக நடத்திவந்தார்!
2012ல் துபாயில் செயல்படும் ஹலோ எஃப்.எம்.89.5 பண்பலை வானொலியில் கண்ணதாசன் பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சி வழங்கினார்!
இத்தகு வானொலி நிகழ்ச்சிகள் வாயிலாக அமீரக வானொலி நேயர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டவர்!
துபாயில் உள்ள சங்கமம் தொலைக்காட்சி வாயிலாக தமிழன் தொலைகாட்சியில் 18 வாரங்கள் தொடர்ச்சியாக திங்கள் தோறும் தித்திக்க கவியரசு கண்ணதாசன் சிறப்பு நிகழ்ச்சிகள் வழங்கியவர்!
2012ல் ஜுலை 6ஆம் நாள் துபாயில் கவியரசு கண்ணதாசன் விழாவை நடத்தி கண்ணதாசன் சிறப்பு மலர் வெளியிட்டார் என்பவை கவியரசர் புகழ்பாடும் காவிரிமைந்தனை இன்றும் வழிமொழிகின்றன!
பொதிகை தொலைக்காட்சியில் 2009ல் இவர் வழங்கிய கண்ணதாசனின் பன்முகங்கள் மற்றும் கண்ணதாசன் பாடல்களில் இலக்கியத் தாக்கங்கள் என்னும் நிகழ்ச்சிகள் இவரை நேயர்களிடம் மேலும் கொண்டு சேர்த்தன.
ஜெயா தொலைக்காட்சியில் 2009ல் தேன்கிண்ணம் நிகழ்ச்சியை தன் வார்த்தை வரிகளால் அலங்கரித்து கவியரசர் பாடல்களில் உள்ள சிறப்புகளை எடுத்துரைத்தார்!
தி ஹிந்து நாளிதழில் இவரின் நேர்க்காணல், இதயம் பேசுகிறது வாரயிதழ், சுதேசமித்திரன் நாளேடு, ஸ்பிக் நிறுவனத்தின் உள்ளீட்டு இதழான ஸ்பிக் ஹார்வெஸ்டு இவரின் எழுத்துலகப் பிரவேசத்திற்கு அடித்தளமிட்டவை என்பதை நன்றியோடு நினைவு கூர்கிறார்.
தமிழகம் அறிந்த இலக்கிய ஆர்வலர்களுள் இவரும் ஒருவராய் பரிணமிக்க அமீரகத்திலும் இவரின் இலக்கியப் பணிகள் 2006முதல் இன்றும் தொடர.. வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பின் ஆலோசகர்.. தமிழ்த்தேர் மாத இதழின் ஆசிரியர்! என பன்முகம் காட்டும் பைந்தமிழ்ச் செல்வர்! பண்பிற்கினிய நண்பர்! கவித்திறன் காட்டும் காவிரிமைந்தனை அறிந்தவர் அனைவரும் விரும்பும் அன்புடை நெஞ்சத்தார்!
இந்த கருப்பு நதியின் களைப்பிலா பணியிலேதான் கந்தர்வ விழா கவிதைக்கு நடக்கிறது என்றார் கவிவேந்தர் இளந்தேவன்!
ஆசை முளைக்கு முன்னே தமிழ் மேல் ஆசை முளைத்ததனால் இவர் அங்கமெல்லாம் தமிழானார்!
கண்ணதாசன் பெயர் சொல்லும்போதெல்லாம் காவிரிமைந்தனின் பெயரும் நினைவுக்கு வருகிறது என்றார் வானொலி நிலைய நிகழ்ச்சித் தொகுப்பாளர் ராம்விக்டர்!
அபுதாபி பழனி குறிப்பிடும்போது பெயரில் உள்ள காவிரி பேனாவில் நுழைந்து பேழையை நிரப்புகிறது என்றார்.
இவர் எங்கள் காவிரிமைந்தன் என்று சொந்தம் கொள்ளும் அன்புத்தமிழ் உறவுகளைப் பெற்றுத் திகழ்கிறார்!
கவிஞர் கவிமதி வரிகளில் சொல்வதென்றால்.. கண்ணதாசன் புகழ் பாடுகிறார் என்பதெல்லாம் புனைவுச் சொற்கள்தாம்! தவம் செய்கிறார் என்பதே தக்கச் சொல்!
கவிஞர் நெல்லை ஜெயந்தா அவர்கள் குறிப்பிட் வகையில்.. கவிதைகளை நேசிக்கத் தெரியாத கண்களுக்கு மட்டும் தொட்டறியாத வானத்தைப் போல தூரமாயிருப்பார்.. எங்கள் தாமிரபரணியின் தண்ணீர் நிழலில் வாழும் எடைமிகுந்த வரப்பைப்போல ஈரமாயிருப்பவர்!
கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் தலைநகரில் எடுக்கும்விழாக்களில் உயிர் மெய் எழுத்துக்களே வந்து உட்கார்ந்திருக்க.. ஆயுத எழுத்தாய் இங்கும் அங்கும் சுழல்வாரே அவர்தான் காவிரிமைந்தன்!!