தேர்தல் விதி முறை மீறல் வழக்கு
முதுகுளத்தூர், சாயல்குடி பகுதிகளில் வேட்பாளர் அறிமுக கூட்டத்தின்போது அரசு அனுமதியின்றி பொது இடங்கள் மற்றும் வாகனங்களில் கட்சிக் கொடிகள் கட்டி வந்தவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார், மாவட்டம் முழுவதும் சுவற்றில் எந்தவித கட்சிக் கொடிகள் மற்றும் சின்னங்களை வரையக்கூடாது என தெரிவித்துள்ளார். மேலும் வாகனங்கள், பொது இடங்களில் அரசு அனுமதியின்றி கட்சிக்கொடிகள் கட்டி வருவதற்கு அனுமதி கிடையாது என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் முதுகுளத்தூர் தேவர் மஹாலில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டத்தின் போது கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ராமையா என்பவர் தனது வாகனத்தில் கட்சி கொடியினை கட்டி வந்ததாக தேர்தல் பறக்கும் படை அதிகாரி குணசேகரன் முதுகுளத்தூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் ராமையா மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என முதுகுளத்தூர் தாசில்தார் ரவீந்திரநாதன் தெரிவித்தார்.
மேலும் சாயல்குடியில் செவ்வாய்க்கிழமை தேவநேசன் மஹாலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் செயல்வீரரர்கள் கூட்டத்தின் போது மின்கம்பம் மற்றும் பொது இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கொடிகளை கட்டியதாக தேர்தல் பறக்கும்படை அதிகாரி பூ.வீரராஜா சாயல்குடி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
புகாரின் பேரில் வட்டார காங்கிரஸ் கமிட்டி செயலர் டி.ஆர்தர், கமிட்டி தலைவர் எஸ்.வி.கணேசன் ஆகியோர் மீது சாயல்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.