தேசிய ஊரக வேலை திட்டத்தில் 6 மாதமாக சம்பளம் வழங்கவில்லை தொழிலாளர்கள் கடும் அவதி
தேசிய ஊரக வேலை திட்டத்தில் 6 மாதமாக சம்பளம் வழங்கவில்லை தொழிலாளர்கள் கடும் அவதி
முதுகுளத்தூர்: மத்திய அரசால் கடந்த 2005ம் ஆண்டு தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் துவங்கப்பட்டது. இத்திட்டத்தில் கண்மாய் மராமத்து, ஊரணி ஆழப்படுத்துதல், சாலையோர பராமரிப்பு, மரக்கன்று நடுதல், அதற்கு தண்ணீர் ஊற்றுதல், வரத்து கால்வாய் மேம்பாடு என பல்வேறு பணிகளை செய்து வந்தனர். இதற்கான கூலி ஆரம்பத்தில் ரூ.88ல் இருந்து தற்போது ரூ.203 வரை வேலைக்கு ஏற்றார் போல் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் கடந்த 6 மாதங்களாக முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் மூலம் கிராம ஊராட்சிகளில் ஊரக வேலை ெசய்தவர்களுக்கு சம்பளம் கொடுக்க வில்லை. இதனால் அவர்கள் வீட்டு செலவு கூட செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவுவதால், பிழைப்புக்கு கூட வழி இல்லாத அளவிற்கு கஷ்டப்பட்டு வருகின்றனர். 6 மாதமாக வழங்கப்படாத கூலியினை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
முதுகுளத்தூர் கருப்பையா, முத்திருளாயி கூறுகையில், கடந்த 6 மாதங்களாக நூறு நாள் வேலை செய்து வருகிறோம். ஆனால் அதற்கான கூலி கிடைக்க வில்லை. தற்போது குடி தண்ணீருக்கு கூட கடும் திண்ணாட்டத்தில் உள்ளோம். ஆனால் நூறு நாள் வேலை திட்டத்திற்கு என ஆண்டுக்கு 30 ஆயிரம் முதல் 36 ஆயிரம் கோடி நிதி ஒதுக்குவதாக மத்திய அரசு அறிவிக்கின்றது. ஆனால் இந்த நிதியெல்லாம் எங்கு போகின்றதா என தெரிய வில்லை. எது எங்கு போனாலும் எங்களுக்கு வழங்க வேண்டிய கூலி பணத்தினை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.