தபால்கள் தாமதம் கிராம மக்கள் அவதி
முதுகுளத்தூர் அருகே காக்கூர் கிளை தபால் அலுவலகம் மூலம் தாமதமாக பட்டுவாடா செய்யப்படும் தபால்களால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
காக்கூர் கிளை தபால் அலுவலகம் மூலம் புளியங்குடி, ஆதனக்குறிச்சி, காமராஜர், தேவர் நகர், சமத்துவபுரம், குமாரகுறிச்சி, ராமலிங்கபுரம் உட்பட பல கிராமங்களுக்கு தபால்கள் பட்டுவாடா செய்யப்படுகிறது. பத்து கி.மீ., தொலைவிலுள்ள தேரிருவேலியில் தபால்கள் பிரிக்கபட்டு, காக்கூர் கிளை அலுவலகத்திற்கு அனுப்பப்படுகிறது. இதனால், தாமதமாக மக்கள்களுக்கு தபால்கள் பட்டுவாடா செய்யப்படுகிறது.
வேலைவாய்ப்பு அழைப்பானை, மாணவர்களின் உயர் கல்வி கலந்தாய்வு, பாஸ்போர்ட் தொடர்பான கடிதங்கள், முதியோர் ஓய்வூதியம் போன்றவை குறிப்பிட்ட காலத்திற்குள் பெற முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். காக்கூர், தங்கவேல்: காக்கூர், தேரிருவேலி, முதுகுளத்தூர் தபால்கள் பரமக்குடியில் பிரிக்கப்பட்டு, 10 கி.மீ., தொலைவிலுள்ள தேரிருவேலிக்கு அனுப்பப்படுகிறது. மீண்டும், அங்கிருந்து காக்கூர் கிளை தபால் அலுவலகத்திற்கு தபால்கள் அனுப்பப்படுகிறது. காலதாமதமாக தபால்கள் பட்டுவாடா செய்வதால், மக்கள் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, காக்கூர் கிளை தபால் அலுவலகம் மூலம் தாமதமின்றி தபால் பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.