தடை உத்தரவை நீக்கக்கோரி பொதுமக்கள் பஸ் மறியல்
முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளில் அமலில் உள்ள 144 தடை உத்தரவை நீக்கக்கோரி பொதுமக்கள் பஸ் மறியலில் ஈடுபட்டனர்.
பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையின்போது அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை நீக்க வேண்டும் என ஆப்பநாடு மறவர் சங்கத் தலைவர் தூவல் ராமசாமித் தேவர் தலைமையில் முக்குலத்தோர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் முதுகுளத்தூரிலுள்ள தேவர் சிலை அருகில் பஸ் மறியலில் ஈடுபட்டனர்.
டிஎஸ்பி நடராஜன், இன்ஸ்பெக்டர் ஜேசு ஆகியோர் அவர்களுடன் பேச்சுவார்தை நடத்திய பின் மறியலை கைவிட்டனர். அதேபோல் கடலாடி, ஆப்பனூர் மற்றும் புனவாசல் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் உட்பட 500 க்கும் மேற்பட்டோர் தடை உத்தரவை நீக்கக்கோரி பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.