சிமென்ட் ஒதுக்கீடு மிகக்குறைவு இலவச வீடு கட்டும் பணி முடக்கம்
முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் ஒன்றியத்திற்கு சிமென்ட் ஒதுக்கீடு குறைவாக வந்ததால், இலவச வீடுகள் கட்டும் பணி முடங்கியுள்ளது.
முதுகுளத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட கிராமங்களில் மத்திய, மாநில அரசுகள் மூலம், வீடு இல்லாத 500க்கும் மேற்பட்டோருக்கு, இலவச வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு வருகிறது. அரசு சார்பில் சிமென்ட், கம்பிகள், கழிப்பறை கோப்பைகள், “சோலார்’ மின் அமைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இரண்டு மாதங்களாக சிமென்ட், இரும்பு கம்பிகள் ஒதுக்கீடு வரவில்லை.
பயனாளிகள் சிலர் கூறியதாவது: ஏற்கனவே உள்ள கூரை வீட்டை இடித்து, இலவச வீடு கட்டி வருகிறோம். இரண்டு மாதங்களுக்கு மேலாக சிமென்ட், கம்பிகள் வழங்கப்படவில்லை.
தற்போது 5,000க்கு பதில், 600 சிமென்ட் மூடைகளே வந்துள்ளது. அவையும் ஒரு மணி நேரத்திலேயே ஒன்றிய அலுவலகம் அருகிலுள்ள பயனாளிகள் எடுத்து சென்றுவிட்டனர், என்றார்.
ஒன்றிய அதிகாரி ஒருவர் கூறுகையில், “”சிமென்ட், கம்பி ஒதுக்கீடு கோரி, மாவட்டநிர்வாகத்திடம் முறையிட்டுள்ளோம். வந்தவுடன், வழங்கப்படும்,” என்றார்.