சட்ட உதவி மையம் திறப்பு
முதுகுளத்தூர் அருகே செல்வநாயகபுரத்தில் சட்ட உதவி மையம் திறப்பு விழா நடைபெற்றது.
முதுகுளத்தூர் அருகே உள்ள செல்வநாயகபுரம் கிராமத்தில் சட்ட உதவி மையம் திறப்பு விழா நடைபெற்றது. நீதிபதி மோகன்ராம் தலைமை வகித்து மையத்தை திறந்து வைத்தார்.
செல்வநாயகபுரம் ஊராட்சித் தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். வழக்குரைஞர்கள் முனியசாமி, சந்திரசேகர், முருகேசன் ஆகியோர் பிறப்பு, இறப்பு சான்றிதழ், பட்டாமாறுதல் போன்ற அரசு நலத்திட்டங்கள் இலவசமாக வழங்குவது குறித்து சிறப்புரை ஆற்றினர். முதுநிலை நிர்வாக உதவியாளர் ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினார். விழா ஏற்பாடுகளை சட்டப் பணிக் குழுவினர் உமையலிங்கம், துரைமுருகன், சண்முகநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.
இதேபோல் கடலாடி யூனியன் அலுவலகத்தில் சட்ட உதவி மையம் திறப்பு விழா நடைபெற்றது. நீதிபதி மோகன்ராம் தலைமை வகித்து சட்ட உதவி மையத்தை திறந்து வைத்தார். ஊராட்சி ஒன்றியகுழுத் தலைவர் வீ.மூக்கையா முன்னிலை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கதிரேசன், வழக்குரைஞர்கள் கோவிந்தசாமி சிறப்புரையாற்றினர். கடலாடி ஊராட்சி மன்ற தலைவர் முருகன் நன்றி கூறினார்.