குறைந்த பயனாளிகளை ஈடுபடுத்த நிர்ப்பந்தம் 100 நாள் வேலைத்திட்டம் நிறுத்தம்
முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில், குறைந்த பயனாளிகளை ஈடுபடுத்த அதிகாரிகள் நிர்பந்திக்கின்றனர். இதனால் 100 நாள் வேலைத்திட்டம் நிறுத்தபட்டுள்ளது. 20 நாள்களுக்கும் மேலாக வேலையின்றி தவிக்கின்றனர்.
முதுகுளத்தூர் ஒன்றியத்தில் 46 ஊராட்சிகளில், 100 நாள் வேலைத்திட்டத்தை மேற்பார்வையிட, 190 களப்பணியாளர்கள் நியமிக்கபட்டுள்ளனர். கிராமங்களில் மழைநீரை சேகரிக்கும் வகையில் விவசாய நிலங்களில், பண்ணைக்குட்டைகள் அமைக்க, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
30 க்கு 30 மீட்டர் நீளம், அகலம் கொண்ட ஒரு பண்ணைக்குட்டை அமைக்க, 40 பயனாளிகளை மட்டும் ஈடுபடுத்த, அதிகாரிகள் நிர்பந்தம் செய்கின்றனர். இதனால் பெரும்பாலான பயனாளிகள் வேலையின்றி முடங்கியுள்ளனர்.
மேலும் விவசாய பண்ணைக்குட்டைகளை அமைக்க, விவசாயிகள் முன்வரவில்லை. 20 நாள்களுக்கும் மேலாக, முதுகுளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் 100 நாள் வேலைத்திட்டம் நடைபெறவில்லை.
முதுகுளத்தூர் ஒன்றிய ஊராட்சிதலைவர்கள் கூட்டமைப்பு துணை செயலாளர் சங்கரவேல் கூறியதாவது: பருவமழை துவங்கிவிட்ட நிலையில், கிராமங்களிலுள்ள நீர் ஆதார அமைப்புகளை மேம்பாடு செய்யவிடாமல், பண்ணைக்குட்டைகள் மட்டும் அமைக்க, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
குறைந்தபட்ச பயனாளிகளுக்கு மட்டும் இத்திட்டத்தில் வேலை கிடைக்கிறது. பெரும்பாலானோர் வேலையின்றி கஷ்டத்தில் உள்ளனர். குறைந்தபட்ச பயனாளிகளுக்கு பணி வழங்குவதால், கிராமங்களில் பிரச்னை ஏற்படுகிறது.
பண்ணைக்குட்டை அமைக்க விவசாயிகள் தயக்கம் காட்டுவதாலும், 100 நாள் வேலைத்திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளோம், என்றார்.
முதுகுளத்தூர் ஒன்றிய அதிகாரி ஒருவர் கூறும்போது: மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுபடி, ஊராட்சிகளில் 100 நாள் வேலைத்திட்டத்தை அமல்படுத்த, ஊராட்சி தலைவர்களுக்கு உத்தரவிட்டுளோம். இதை அமல்படுத்தாமல், பயனாளிகள் ஏற்படுத்தும் சில பிரச்னைகளால், சில ஊராட்சி தலைவர்கள், 100 நாள் வேலையை நிறுத்தி வைத்துள்ளனர். ஊராட்சி தலைவர்கள், பயனாளிகளிடம் சுமூகமாக பேசி, 100 நாள் வேலை, விரைவில் துவங்கபடும், என்றார்.