காவிரி குடிநீர் விநியோகத்துக்கு நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
முதுகுளத்தூர் பகுதியில் காவிரி குடிநீர் விநியோகத்துக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
முதுகுளத்தூர் ஒன்றியக்குழுக் கூட்டம் தலைவர் சுதந்திராகாந்தி இருளாண்டி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவர் ஆர்.தர்மர், ஆணையாளர் குருநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வேலுச்சாமி, எம்.சிவக்குமார், தனசேகரன் உள்ளிட்டோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
அப்போது அவர்கள் பேசுகையில், தேரிருவேலி,இளங்காக்கூர் கிராமங்களில் மழை பெய்தால் மூன்று நாள்களுக்கு மின் தடை ஏற்படுகிறது. எனவே, இப்பகுதியிலுள்ள மின்கம்பங்களையும்,கம்பிகளையும் மாற்ற வேண்டும். மணிபுரம் பகுதி கிராமங்களுக்கு காவிரி குடிநீர் விநியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊராட்சிகளில் வழங்கப்படும் பசுமை வீடுகளை ஒதுக்கும்போது சம்மந்தப்பட்ட ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், என வலியுறுத்திப் பேசினர். இப்பிரச்னைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் பதிலளித்தார்.