காங்கிரஸ் வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு
முதுகுளத்தூரில் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.மலேசியாபாண்டியனுக்கு வெள்ளிக்கிழமை திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முதுகுளத்தூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.மலேசியாபாண்டியன், வெள்ளிக்கிழமை முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள தேவர்சிலை, சுந்தரலிங்கம் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு அவருக்கு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது காங்கிரஸ் வட்டார தலைவர் போஸ், மாவட்ட செயலாளர் திருமூர்த்தி, நகர் தலைவர் என்.சுரேஸ்காந்தி, திமுக ஒன்றிய செயலாளர் ராஜசேகர் (கடலாடி), முதுகுளத்தூர் (கிழக்கு), பூபதிமணி, முத்துராமலிங்கம் (மேற்கு) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பரமக்குடியில்… முன்னதாக பரமக்குடி பாரதி நகரில் மலேசியா எஸ்.பாண்டியனுக்கு காங்கிரஸ் கட்சி நகர் தலைவர் எம்.அப்துல்அஜிஸ் தலைமையில் கூட்டணி கட்சியைச் சேர்ந்த தர்மலிங்கம், கோட்டை முத்து, சிதம்பரராஜன், ஜெயமுருகன், விக்னேஸ்வரன், கோவிந்தன் ஆகியோர் கட்சி தொண்டர்களுடன் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது மலேசியா பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியது: கடந்த 2001-ல் நடந்த தேர்தலில் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தேன். அன்றுமுதல் அத்தொகுதியின் அனைத்து சமுதாய மக்களிடமும் நல்ல உறவுமுறையை வைத்துள்ளேன். மேலும் கூட்டணி கட்சிகளும் பலமாக உள்ளதால் எனக்கு வெற்றி என்பது உறுதி. பின்தங்கிய அந்த பகுதியில் இளைஞர்களிடம் வேலைவாய்ப்பு ஏற்படுத்திட பாடுபடுவேன் என அவர் தெரிவித்தார்.
பரமக்குடியில் உள்ள அவரது இல்லத்தில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.