ஐகோர்ட் வரை சென்று போராடி குண்டும் குழியுமானதால் மக்கள் அவதி
முதுகுளத்தூர், : ஐகோர்ட் வரை சென்று போராடி ரூ.21 லட்சத்தில் போடப்பட்ட புதிய சாலை2 மாதங்கள்கூட தாங்காமல் குண்டும் குழியுமாகி மாறியது. இதனால், போக்குவரத்துக்கு லாயகற்றதாகிப் போனது. இது குறித்து கிராம மக்கள் கலெக்டரிடம் புகார் அளித்துள்ளனர் முதுகுளத்தூர் அருகேயுள்ள கிடாத்திருக்கை கிராமத்தில் இருந்து எஸ்பி கோட்டை, கொண்டுலாவி வழியாக சித்திரங்குடி வரை 3.5 கிமீ தொலைவில் ரூ.21 லட்சத்தில் ஆர்ஆர்எம்எஸ் திட்டத்தில் புதிதாக தார்சாலை போடப்பட்டது
இந்தச் சாலையால் மக்கள் நிம்மதி அடைந்த நிலையில் அது நீண்ட நாட்களுக்கு நீடிக்காமல் அற்ப ஆயுசாக மாறி
யது.பல ஆண்டுகளாகச் சீரமைக்கப்படாமல் இருந்த இந்தச் சாலையைப் புதிதாகப் போட வேண்டும் என கலெக்டர், உள்ளாட்சிப் பிரதிநிதிகளிடம் கிராம மக்கள் மனு அளித்தனர். ஆனாலும், எந்த நடவடிக்கையும் இல்லை. பின்னர் புதிய சாலை அமைக்கக் கோரி ஐகோர்ட் மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தனர். இதில் மனுவை விசாரித்த நீதிபதிகள், புதிதாக சாலைபோட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர். அதன்பேரில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு ரூ.21 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தனர். அதிமுகவின் முக்கியப் பிரமுகர் ஒருவர் ஒப்பந்தம் எடுத்து புதிதாக சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டார்.
ஆனால், முறையாகப் பணி செய்யவில்லை. ஆனால் புதிதாகப் போடப்பட்ட சாலை இரண்டு மாதங்கள்கூட தாங்காமல் முற்றிலும் சேதமடைந்துவிட்டது. மேலும் கற்கள் பெயர்ந்து குண்டு குழியாக மாறி பொதுமக்கள் நடந்து செல்லக்கூட முடியாத அளவுக்கு மாறிப்போனது.ஒரு சாலை அமைத்தால் 5 ஆண்டுக்குப் பயன்பட வேண்டும். இந்தச் சாலை இரண்டு மாதங்கள்கூட தாங்காமல் கற்கள் பெயர்ந்து படுமோசமாக மாறிவிட்டது.
இது குறித்து கொண்டுலாவி கிராம மக்கள் கூறுகையில், “இந்தச் சாலை அமைக்க பல தரப்பினரிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை. பின்னர் ஐகோர்ட் வரை சென்று புதிதாக சாலை போட நடவடிக்கை எடுத்தோம். சாலை மீண்டும் பழைய நிலையை அடைந்துவிட்டதால் பள்ளி மாணவ, மாணவிகள், வாகன ஓட்டிகள் உள்பட பொதுமக்கள் அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து கலெக்டரிடம் புகார் அளித்துள்ளோம்” என்றனர்.