இளம்பெண் சந்தேக மரண வழக்கு: கொலை வழக்காக மாற்றம் : தந்தை கைது
முதுகுளத்தூரில் இளம்பெண் சந்தேக மரணம் தொடர்பாக போலீஸார் பதிவு செய்திருந்த வழக்கில் அவரது தந்தையே மகளை கொலை செய்திருப்பதாக விசாரணையில் தெரிய வந்ததைத் தொடர்ந்து வியாழக்கிழமை அவரை கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா வாசிபுரம் அருகே கதையன் கிராமத்தை சேர்ந்த அல்லிராஜன் மகள் திவ்யா (16). இவரும் அதே ஊரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சரண்ராஜ் (24) என்பவரும் காதலித்துள்ளனர். சென்னையில் கேன்டீன் ஒன்றில் பணியாற்றி வந்த சரண்ராஜ் கடந்த மே மாதம் 16ஆம் தேதி திவ்யாவுடன் தலைமறைவாகிவிட்டார்.
இதுகுறித்து திவ்யாவின் தந்தை அல்லிராஜன் முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்ததைத் தொடர்ந்து அப்பெண்ணை போலீஸார் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்திருந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஜூலை 6ஆம் தேதி திவ்யா வீட்டில் பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அல்லிராஜன் காவல் நிலையத்தில் மீண்டும் புகார் செய்தார். இப்புகார் தொடர்பாக போலீஸார் பெண்ணின் சாவில் சந்தேகம் இருப்பதாக வழக்குப்பதிவு செய்திருந்தனர். பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கையில் மூச்சுத்திணறி அவர் உயிரிழந்திருப்பதாகவும், பூச்சி மருந்து சாப்பிட்டு இறந்ததற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை என்றும் தெரிய வந்தது. இதனையடுத்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீஸார் மகள் திவ்யாவை
அவரது தந்தை அல்லிராஜனே தலையணையை வைத்து அமுக்கி கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து முதுகுளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் திவ்யாவின் தந்தை அல்லிராஜனை கைது செய்துள்ளார்.