அரிவாளால் வெட்டியதில் ஒருவரின் கை விரல்கள் துண்டிப்பு
முதுகுளத்தூர் அருகே இ.நெடுங்குளம் கிராமத்தில், முன்விரோதம் காரணமாக இருவரிடையே ஏற்பட்ட தகராறில் அரிவாளால் வெட்டியதில், ஒருவரது கை விரல்கள் துண்டிக்கப்பட்டன.
இ.நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த நீலமேகம் மகன் பூவலிங்கம் (23) என்பவருக்கும், மேலமானாங்கரையைச் சேர்ந்த வேலு மகன் வில்வமூர்த்தி (43) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், வில்வமூர்த்தி வெளியூரில் இருந்து தனது சொந்த ஊருக்கு புதன்கிழமை வந்துள்ளார். அப்போது, பூவலிங்கம் அவருடன் தகராறு செய்து, அரிவாளால் வெட்டினாராம். இதில், வில்வமூர்த்தியின் 2 விரல்கள் துண்டிக்கப்பட்டன. படுகாயமடைந்த அவர், முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இது குறித்து, இளஞ்செம்பூர் காவல் நிலையத்தில் வில்வமூர்த்தி கொடுத்த புகாரின்பேரில், பூவலிங்கம் மீது வழக்குப் பதிந்து சார்பு-ஆய்வாளர் ஜெயக்குமார் கைது செய்தார்.