அழகிய ஆடை எது ?

Vinkmag ad

அழகிய ஆடை எது ?

(  மெளலவி முஃப்தி மு. முஹம்மது ஹுஸைன் தாவூதி பாஜில் தேவ்பந்தி )

பெண்களை பாதுகாப்பதில் அவர்கள் அணியும் ஆடை முக்கிய பங்கு வகிக்கிறது. இன்று பெண்கள் அணியும் சில ஆடைகள் தான் இளைஞர்களுக்கு தவறான எண்ணத்தைத் தூண்டி அவர்களை பாவங்களில் ஈடுபடுத்துகிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

உடலுறுப்புகளை வெளியில் காட்டும்படியான மெல்லிய ஆடை

அங்கங்களை எடுத்துக் காட்டும்படியான இறுக்கமான ஆடை

உடலை முழுமையாக மறைக்காத அரைகுறை ஆடை

இன்றைய நாகரிக பெண்களின் ஆடைகள் இவைகள்தாம். மறைக்கப்பட வேண்டிய பகுதிகளை வெளியில் காட்டுவதுதான் பெண் சுதந்திரம் என்று அவர்கள் விளங்கி வைத்துள்ளனர்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “என் உம்மத்தில் இரு கூட்டத்தார் சொர்க்கம் செல்ல மாட்டார்கள். அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள். அவர்களில் யாரையும் நான் கண்டதில்லை. (எனக்குப் பின் வருவார்கள்) அவர்களில் ஒரு கூட்டத்தினர் ஆடையணிந்தும் நிர்வாணமாக இருக்கக் கூடிய, மற்றவர்களை தன் பக்கம் கவர்ந்து தானும் அவர்களின் பக்கம் சாயக் கூடிய, ஒட்டகத்தின் திமில்களைப் போன்ற தலை அமைப்பை உடைய பெண்களாவர்.” (நூல் : முஸ்லிம்)

ஆடையணிந்தும் நிர்வாணமாக இருப்பவர்கள் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னது மேற்கண்ட வகையில் ஆடை அணிபவர்களைத்தான். மானத்தை மறைப்பதே ஆடையணிவதன் நோக்கம். ஆனால் ஆடையணிந்தும் மானம் வெளிப்படுகிறதென்றால் அது நிர்வாணமல்லாமல் வேறென்ன?

உடலை மட்டுமல்ல, அந்நிய ஆண்களுக்கு முன்னால் தலையைத் திறப்பதையே இஸ்லாம் தடை செய்துள்ளது.

அந்நிய ஆண்களைவிட்டும் தன் தலைமுடியை மறைக்காததன் காரணமாக ஒரு பெண் தலைமுடியினால் கட்டி தொங்கவிடப்பட்டு அவளது மூளை நெருப்பில் கொதித்துக் கொண்டிருப்பதை நான் மிஃராஜ் (விண்ணுலகப்) பயணத்தின் போது நரகில் கண்டேன் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல் : அல்கபாயிர்)

தலைமுடியை வெளிப்படுத்தியதற்கே இந்த தண்டனையெனில், உடலுறுப்புகளை வெளிப்படுத்தும் பெண்களுக்கு மறுமையில் என்ன தண்டனை கிடைக்கும் என்பதை சகோதரிகள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள் அஸ்மா (ரலி) அவர்கள் ஒரு சமயம் மெல்லிய ஆடையணிந்து நபி (ஸல்) அவர்களின் சமூகத்திற்கு வந்தார். அவரைப் பார்த்ததும் தமது திருமுகத்தை திருப்பிக் கொண்ட நபி (ஸல்) அவர்கள், “அஸ்மாவே ! ஒரு பெண் பருவமடைந்து விட்டால், அவளுக்கு இத்தகைய ஆடைகள் சரியல்ல என்று கூறி முகம் மற்றும் உள்ளங்கைகளைத் தவிர முழு உடலும் மறைக்கப்பட்டிருக்க வேண்டும்” என்று சைகை செய்து கூறினார்கள்.

இவ்விஷயத்தில் ஒவ்வொரு பெற்றோரும் கவனம் செலுத்த வேண்டும். கண்ட கண்ட டி.வி. நிகழ்ச்சிகளைப் பார்த்து விட்டு, தங்களின் பிள்ளைகளுக்கு அரைகுறை ஆடைகளை வாங்கிக் கொடுக்கின்றனர். மேலும் சிறுவர்களுக்கு சிறுமிகளின் ஆடைகளையும், சிறுமிகளுக்கு சிறுவர்களின் ஆடைகளையும் அணிவித்து அழகு பார்க்கின்றனர். இதன் காரணமாக இந்த ஆடைகளின் மோகம் அவர்களின் உள்ளத்தில் பதிந்து விடுகின்றது. அவர்கள் பெரியவர்களான பின்பும் இவ்வித ஆடைகளையே விரும்பும் நிலை ஏற்படுகிறது. இதற்கு மார்க்க ஞானம் இல்லாத அவர்களின் பெற்றோரே காரணமாக இருக்கிறார்கள்.

சென்ற வருடம், ஆந்திர போலீஸ் டைரக்ட் ஜெனரல் தினேஷ் ரெட்டி என்பர், “மகளிர் அணியும் கவர்ச்சிகரமான ஆடைகள்தான் ஆண்களின் உணர்வுகளைத் தூண்டுகின்றன. எனவே மெல்லிய ஆடைகளைத் தவிர்த்து கண்ணியமான ஆடைகளை அணிய வேண்டும்” என்று கூறினார்.

மேலும் இந்தியாவிலுள்ள பெண்கள் அமைப்புகளில் ஒன்றான ராஷ்டிரீய சேவாசிமிதியின் தலைவி லலிதாராணி, “மேலைநாட்டு நாகரிகத்தின் மோகத்தால் பெண்கள் அரைகுறையான ஆபாச ஆடைகளை அணிகின்றனர், அவர்களைப் பார்க்கின்ற ஆண்கள் கண்களை மூடிக்கொள்ள வேண்டுமென்று நினைக்கிறார்கள் போலும்” என்று கூறியுள்ளார்.

இதை உணர்ந்து பெண்கள் தங்கள் அறிவுக்கு போட்டுள்ள ஆடையை நீக்கி அதை தங்கள் உடலுக்கு போட்டுக் கொண்டால்தான் அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கும்.

உங்களின் நட்பு யாருடன்?

நீ உன் நண்பனை பற்றிச் சொல். நான் உன்னை பற்றிச் சொல்கிறேன் என்பது ஒரு பழமொழி. ஒருவரின் குணத்தைப் பற்றித் தீர்மானிக்க அவரின் நண்பர்களைப் பார்த்தால் போதும். இதைத்தான் நபி (ஸல்) அவர்கள், “ஒரு மனிதன் அவனது நண்பனின் மார்க்கத்தில்தான் இருப்பான். எனவே உனது நண்பர் எதில் இருக்கிறார் என்பதை கவனித்துக் கொள்” என்று கூறியுள்ளார்கள். நூல் : புகாரி.

ஒருவருடன் நட்பு கொள்வதற்கு முன் அவரின் குணங்கள் பழக்கவழக்கங்கள் எப்படிப்பட்டவை என்பதை கவனிப்பது அவசியம். ஒரு மனிதருக்கு நல்ல நண்பர்கள் கிடைத்து விட்டால் அவர் நன்மையின் வாசலுக்குள் நுழைந்து விடுகிறார். இதற்கு மாற்றமாக தீய நண்பர்களுடன் நட்பு வைப்பவர் அவர்களோடு சேர்ந்து தானும் தீமைகளை புரிய ஆரம்பித்து விடுகிறார். இன்று பெண்களில் பலரை தங்களின் மார்க்க வட்டங்களை விட்டும் வெளியே செல்ல வைப்பது அவர்களுடைய தீய நண்பர்களின் தொடர்புதான். இதன் காரணமாக அவர்கள் பாதுகாப்பற்ற சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். நட்பு என்பது ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களுடன் மட்டுமே இருக்க வேண்டும். அதை விட்டு மஹ்ரமல்லாத ஆண்களுடன் பெண்கள் நட்பு கொள்வதை இன்று பெருமையாகக் கருதுகின்றனர்.

முகம் பார்த்து நட்பு கொண்ட காலம் போய் இன்று முகநூல் பார்த்து நட்பு கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாம் நட்பு வைத்திருப்பர் ஆணா – பெண்ணா? அவரின் வயது என்ன? அவரின் குணம் எப்படிப்பட்டது என எதுவுமே தெரியாத நிலையில் அவரோடு உரையாடுவது தனது தனிப்பட்ட இரகசியங்களை பகிர்ந்து கொள்வது என நாளடைவில் இந்த நட்பு நெருக்கமாகி பல விபரீத விளைவுகளில் கொண்டுபோய் விட்டு விடுகிறது. வெறும் பேச்சு, எழுத்து தொடர்பு தானே என்றாலும் கூட நம்மோடு தொடர்பு கொள்பவர் கெட்டவராக இருந்தால் அதன் தாக்கம் நம்மிலும் பிரதிபலிக்கத்தான் செய்யும்.

நபி (ஸல்) கூறினார்கள். “நல்ல நண்பன் மற்றும் தீய நண்பனின் உதாரணம் கஸ்தூரி விற்பவன் மற்றும் கொல்லனைப் போன்றதாகும். கஸ்தூரி விற்பவனின் தோழமையினால் உங்களுக்கு நிச்சயம் பலன்கள் கிடைக்கும். நீங்கள் கஸ்தூரியை வாங்கிச் செல்வீர்கள் அல்லது கஸ்தூரியின் நறுமணமாவது உங்கள் மீது படும். ஆனால் கொல்லனின் அடுப்பு உங்கள் வீட்டையோ அல்லது ஆடையையோ எரித்துவிடும்.” (நூல் : புகாரி)

இன்னொரு புறம் தம்மோடு படிக்கின்ற அல்லது நம்மோடு வேலை செய்கின்ற ஆண்களோடு பெண்கள் நட்பு கொண்டு அவர்களை தங்களது பாய் பிரண்டுகளாக ஆக்கிக் கொள்கின்றனர். அவர்களோடு நெருக்கமாக நின்று பேசுவது, வெளியிடங்களுக்கு ஒன்றாகச் சேர்ந்து செல்வது, அவர்களின் வீட்டு விஷேசங்களுக்குச் செல்வது, தமது வீட்டுக்கு அவர்களை அழைத்து வருவது, இரவு நேரங்களில் கூட அலைபேசியில் மணிக்கணக்கில் பேசுவது என தங்களின் நட்பை அந்நிய ஆண்களோடு வளர்த்து வருகின்றனர். சாதாரண நட்பாக ஆரம்பிக்கும்.

இத்தொடர்பு நாளடைவில் என்னென்ன விபரீதங்களுக்கு வித்திடப்போகிறது என்பதை அவர்கள் அறிவதில்லை. இன்று வெளிவரும் நாளிதழ்களே இதற்கு சாட்சி.

தீமைகள் ஒவ்வொன்றையும் முளையிலேயே கிள்ளி எறியும் இஸ்லாம் ஆண் – பெண் இருவரும் ஒருவரையொருவர் இச்சையுடன் பார்ப்பதையே கண்களின் விபச்சாரம் என்று கூறுகிறது. எவர்களின் உள்ளத்தில் இறைவனின் அச்சம் இருக்கிறதோ அவர்களுக்குத்தான் இது எவ்வளவு கடுமையான எச்சரிக்கை என்பது புரியும்.

இணையத்தால் விளைந்த இழிநிலை

இன்றைய இருபதாம் நூற்றாண்டுகளில் இணையத்தின் வளர்ச்சி இமயத்தை எட்டிப்பிடித்துவிட்டது. கணினி மையங்களுக்குச் சென்று பார்த்து வந்த தகவல்கள் எல்லாம் இப்போது அலைபேசியிலே பார்க்கின்ற அளவு விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது. கணினி கண்டுபிடிக்கப்பட்ட காலங்களில் உலகமே ஒரு கிராமமாக சுருங்கி விட்டது என பேசப்பட்டது. ஆனால் இப்போது அந்த கிராமமும் கைப்பேசிக்குள் சுருங்கி விட்டது. இப்படி அசுர வளர்ச்சியை விஞ்ஞானம் அடைந்து வந்தாலும் மற்றொரு புறம் அதன் எதிர்விளைவான தீங்குகளும் போட்டி போட்டுக்கொண்டு விடாமல் பின் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த இணையத்தின் கோரப்பிடியில் சிக்கி சீரழிபவர்களில் அதிகமானோர் பெண்கள்தான். ஏனெனில் இணையத்தை பயன்படுத்துவதில் 58% பேர் பெண்கள்தான் என ஒரு கருத்துக் கணிப்பு கூறுகிறது. இது மகிழ்ச்சி அடைய வேண்டிய செய்தியாகவா இருக்கிறது?

 

( நர்கிஸ் மார்ச் 2015 இதழிலிருந்து )

 

News

Read Previous

வெல்பேர் பார்ட்டி ஐந்தாம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி

Read Next

அரிவாளால் வெட்டியதில் ஒருவரின் கை விரல்கள் துண்டிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *