கரோனா சந்தேகங்களுக்கு அறிவியல் என்ன சொல்கிறது?

Vinkmag ad

கரோனா சந்தேகங்களுக்கு அறிவியல் என்ன சொல்கிறது?

தொகுப்பு- ச. கோபாலகிருஷ்ணன்

கோவிட்-19 நோயும் அதற்குக் காரணமான நாவல் கரோனா வைரஸ் குறித்த சந்தேகங்களும் அச்சங்களும் அதிகரித்துவருகின்றன. இந்தப் பின்னணியில் கரோனா குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக ‘கோவிட்-19-க்கு இந்திய அறிவியலாளர்களின் எதிர்வினை’ (Indscicovi-Indian Scientists’ Response to Covid-19) என்ற தன்னார்வ அமைப்பு இணையவழி கலந்துரையாடலை ஒருங்கிணைத்திருந்தது.

சமீபத்தில் நடைபெற்ற இந்த உரையாடலில் புதுடெல்லி விக்யான் பிரசார் அமைப்பின் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன், சென்னை – கணிதவியல் கல்வி நிறுவனத்தைச் (Institute of Mathematical Sciences) சேர்ந்த முனைவர் ஆர்.ராமானுஜம், முனைவர் கிருஷ்ணசாமி, மும்பையில் உள்ள டாடா அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் (Tata Institute of Fundamental Sciences) துணைப் பேராசிரியர் சந்தியா கெளசிகா ஆகியோர் பங்கேற்றனர்.

வெளியில் இருக்கும்போது எப்படிப்பட்ட பாதுகாப்பு தேவை? வீட்டுக்கு வந்த பிறகு என்ன செய்ய வேண்டும்?

ராமானுஜம்: இந்த நோய் Upper respiratory track (மூக்கு பிரதேசம்) மூலமாகத்தான் பெரும்பாலும் பரவுகிறது. எனவேதான், முகக்கவசம் அணிய வலியுறுத்துகிறோம். வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிந்து, அதைக் கையால் தொடாமல், கீழே இறக்காமல் இருந்தால் கரோனா வைரஸ் உங்கள் மீது தொற்றாது. வீட்டுக்கு வந்தவுடன் முகக் கவசத்தை ஒரு சோப் தண்ணீரில் போட வேண்டும். வீட்டில் அப்படியே போட்டுவிட்டால், அதை மற்றவர்கள் தொட்டால் ஆபத்து. அதேபோல் வீட்டுக்கு வந்தவுடன் சானிடைசர்/சோப் போட்டு கைகழுவுவது அவசியம். இதையெல்லாம் முறையாகக் கடைபிடித்தால், பெரும்பாலும் தொற்றைத் தவிர்த்துவிடலாம்.

எந்த வகையான முகக்கவசம் அணிய வேண்டும்?

சந்தியா: துணியால் செய்யப்பட்ட, விலை மலிவான, வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளக்கூடிய முகக்கவசங்களை பயன்படுத்தினால் போதும்.

ராமானுஜம்: N95 முகக்கவசம் போன்றவை சுகாதார முன்களப் பணியாளர்களுக்கு மட்டுமே தேவை. மற்றவர்களுக்கு துணி முகக்கவசமே போதும்.

ஒரு முறை கரோனா வந்தால், மறுமுறை வருமா? ஏற்கெனவே வந்து மீண்டவரிடமிருந்து நமக்கு பரவுமா?

கிருஷ்ணசாமி: ஒரு முறை கரோனா தொற்றிலிருந்து மீண்டவருக்கு மீண்டும் தொற்று ஏற்படும் என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை. தொற்று நீங்கிவிட்டாலும் வைரஸ் நமது உடலிலேயே புதைந்து இருக்கும், திடீரென்று வெளிப்படும் அல்லது மற்றவர்களுக்குப் பரவும் என்பது போன்ற கருத்துகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை. இதுவரை கிடைத்துள்ள புரிதலின்படி, அதற்கு வாய்ப்பே இல்லை.

கரோனா வைரஸ் காற்றில் பரவுமா?

கிருஷ்ணசாமி: பொதுவாக நாம் தும்மும்போது இருமும்போதும் வெளி யாகும் நீர்த்திவலைகளில் நூறு மைக்ரான் முதல் ஆயிரம் மைக்ரான் வரையிலான அளவில் இருக்கும், இவை காற்றில் ஒரு மீட்டர் வரைதான் பயணிக்கும். பின்பு கீழே விழுந்துவிடும். எனவே, ஒரு மீட்டருக்கு இடைப்பட்ட தொலைவில் இருக்கும் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு நீர்த்திவலை பரவும். அந்த நீர்த்திவலையில் உள்ள வைரஸ் நம் கையில் பட்டு, அந்தக் கையால் கண் மூக்கு வாயைத் தொட்டால்தான் வைரஸ் தொற்று ஏற்படும். ஆனால் ஒருவர் பேசும்போது, பாடும்போது வெளியாகும் 5 மைக்ரானுக்கு குறைவான அளவைக்கொண்ட நுண்திவலைகள் (Aerosol) ஒரு மீட்டரைவிட அதிக தொலைவு பயணிப்பவை. காற்று வீசும் திசையைப் பொறுத்து அதன் பயணம் மாறும். இதன் மூலம் கரோனா தொற்று பரவும் என்று திட்டவட்டமாக அறிவிக்கப்படவில்லை. உணவகங்கள் சிலவற்றில் இருமுவதால் – தும்முவதால் கரோனா பரவியது, இது போன்ற சில சான்றுகளின் அடிப்படையில் ‘கரோனா வைரஸ் காற்று மூலம் பரவும்’ என்று உலக சுகாதார நிறுவனத்துக்கு 239 ஆய்வாளர்கள் கடிதம் எழுதினார்கள். எனவே, மூடிய காற்றோட்டமில்லாத அறைகளிலும். ஏ.சி. அறைகளிலும் இருப்பதைத் தவிர்க்கலாம்.

த.வி.வெங்கடேஸ்வரன்: ‘காற்றுவழி யாக கரோனா பரவும்’ என்பதை, வெட்டவெளியில் காற்றில் கரோனா கலந்திருக்கும். நாம் வெளியே போனால் நமக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுவிடும் அல்லது பக்கத்து வீட்டில் இருப்பவரி டமிருந்து காற்றுவழியாகப் பரவி நமக்கு வந்துவிடும் என்று புரிந்துகொள்ளக் கூடாது. காற்றோட்டமில்லாத அறைகள். ஏ.சி. அறைகள், நெரிசலான பகுதிகள் ஆகியவற்றில் ஒருவருக்கு கரோனா இருந்தால், அவரிடமிருந்து வெளியாகும் நுண்திவலைகள் காற்றுவழியே பயணித்து மற்றவர்களுக்குத் தொற்று ஏற்பட சாத்தியம் உண்டு. எனவே நெரிசல் நிறைந்த பகுதிகள், காற்றோட்டமில்லாத அறைகளில் இருப்பதைத் தவிர்த்தாலே போதும்.

கரோனா தடுப்பு மருந்து எப்போது கிடைக்கும்?

கிருஷ்ணசாமி: கோவிட் தடுப்பூசி நான்கு சோதனை நிலைகளைக் கடக்க வேண்டும். கோவிட் விஷயத்தில் தேவையான அவசரம் கருதி, இந்தப் பரிசோதனைகளை ஒரே நேரத்தில் செய்வதற்கு வழிவகுக்கும் வகையில் விதிகள் மாற்றப்பட்டுள்ளன. இந்தத் தடுப்பு மருந்துகளை எந்த பிரச்சினையும் இல்லாத மனிதர்களிடம், உடல்நvvvvலப் பிரச்சினை உள்ளவர்களிடம் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பது நமக்குத் தெரியாது. எனவே, ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வேகமும் வேண்டும் பாதுகாப்பையும் சமரசம் செய்துகொள்ள கூடாது.

கோவிட்டுக்கு இந்திய அறிவியலாளர் எதிர்வினை

‘கோவிட்-19-க்கு இந்திய அறிவியலாளர்களின் எதிர்வினை’ (Indscicovi-Indian Scientists’ Response to Covid-19), கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு எதிராக தன்னார்வத்துடன் பணியாற்றும் இந்திய அறிவியலாளர்களின் குழு. அறிவியலாளர்கள், பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், மருத்துவர்கள், பொதுசுகாதார நிபுணர்கள், அறிவியல் தகவல் தொடர்பாளர்கள், ஊடகவியலாளர்கள் என 500-க்கு மேற்பட்ட உறுப்பினர்களுடன் இந்த அமைப்பு இயங்கி வருகிறது.

தேச, மாநில, உள்ளாட்சி அரசுகள் அறிவியல் நோக்குடனும் தரவுகளின் அடிப்படையிலும் நடவடிக்கைகளை எடுக்க உதவுதல், சரியான அறிவியல் தகவல்களை களப்பணியாளர்களுக்கு வழங்குதல், அறிவியல் தகவல்களை மக்களுக்கு பரப்புதல், அறிவியல்பூர்வமான செயல்பாடுகளை மேற்கொள்ள வலியுறுத்துதல் ஆகியவை இந்த அமைப்பின் நோக்கங் களில் முக்கியமானவை. இந்த அமைப்பின் இணையதளத்தில் (https://indscicov.in/) கரோனா தொடர்பாக அனைத்துத் தரப்பினருக்கும் பயன்படக்கூடிய செய்திக் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், காணொலிகள் பதிவேற்றப்பட்டுள்ளன.

 https://www.hindutamil.in/news/supplements/nalam-vazha/565105-corona-suspicions-4.html

News

Read Previous

துயரத்தைச் சுமக்கும் தூய்மைப் பணியாளர்கள்

Read Next

மனவலிமை

Leave a Reply

Your email address will not be published.