மார்பக புற்றுநோய்

Vinkmag ad

மார்பக புற்றுநோய்

“பொன் வேண்டேன்
பொருள் வேண்டேன்
மண் வேண்டேன்
மனை வேண்டேன்
நோயற்ற வாழ்வே நான் வாழ வேண்டும் “என்பதே அனைவரின் துஆ ஆகும்.

எண்ணற்ற நோய்கள் நம் வாழ்க்கையில் வந்தாலும்பெரும்பாலும் அவைகள் லைப்ஸ்டைல்( Lifestyle) எனப்படும் வாழ்வுமுறை நோய்களே ஆகும்..இவ்வகை நோய்களில் ஏன் ?எதற்கு? எப்படி? என்று அறியும் முன் உடலை அரித்து விடும் நோய்களில் ஒன்று கேன்சர் எனப்படும் புற்றுநோய் ஆகும்.புற்றுநோய் வரக்காரணம் எவ்வளவோ இருக்கலாம் யாருக்கு வேணுடுமானாலும் வரலாம். ஆனால் வந்த பின் அதனுடைய பாதிப்பின் அளவையும் நோயின் தீவிரத்தை பொறுத்தும் நிறைய சிகிச்சை முறைகள் உள்ளது.எல்லா நோய்களை போல இதையும் நாம் ஆரம்ப நிலையிலே கண்டறிந்தால் நூறு சதவிகிதம் குணப்படுத்தலாம்.அதை எப்படி கண்டறிவது என்பதே விழிப்புணர்வு.

இன்று உலக அளவில் பெண்களை அச்சுறுத்தி அவர்கள் உயிரை கலங்க வைக்கும் புற்றுநோய் மார்பக புற்றுநோய் ஆகும்.

சலீமாவிற்கு வயது 24 ,சென்னையில் வசிப்பவர்.இவருக்கு திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆகியும் குழந்தையில்லாத காரணத்திற்காக என்னிடம் சிகிச்சை பெற வந்திருந்தார்.அவரிடம் மற்ற விவரங்களை கேட்ட பின் அவரை பரிசோதனை செய்ய தனி அறைக்கு கூட்டி சென்றேன்.நான் வழக்கமாக கர்ப்பப்பை பரிசோதனை செய்த பின் என்னிடம் வரும் பெண்களுக்கு  மார்பக பரிசோதனை செய்வது வழக்கம்.அன்றும் அப்படித் தான் சலீமாவை பரிசோதனை செய்த பொழுது        எனக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.அவரது வலதுபுற மார்பில் எலுமிச்சை பழம் அளவிற்கு ஒரு கடினமான கட்டி தென்பட்டது.அதை பற்றி அவரிடம் கேட்ட பொழுது அது ஆறு மாதமாக இருக்கிறது .சிறிய அளவில் இருந்து பெரிதாகியுள்ளது என்றும் ஆனால் வலியில்லாத காரணத்தினால் தான் அதை கண்டு கொள்ளவில்லை என்றும் சாதாரணமாக கூறினார்.நான் உடனே அவருக்கு  அறுவை சிகிச்சை நிபுணரின்(எனது கணவரின்) உதவியுடன் ஊசி மூலம் அந்த கட்டியின் செல்களை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பினேன்.அப்போழுது மீண்டும் ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது.அது மிகவும் மோசமான வீரியமுள்ள புற்றுநோய் என முடிவு வந்தது.அது வரைக்கும் சலீமாவிற்கு இந்த விவரம் தெரியாது.அவர் என்னிடம் குழந்தை மனதுடன் ” ஏன் டாக்டரம்மா நான் உங்களிடம் குழந்தையின்மை சிகிச்சைக்காக தானே வந்தேன்.ஆனால் நீங்கள் அதை விட்டுவிட்டு வேறெதற்கோ வைத்தியம் பார்த்து கொண்டிருக்கிறீர்கள்’ எனக் கேட்டார்.அவரின் நிலைமை எனக்கு பரிதாபமாக இருந்தது.இறைவன் எதற்காக இத்தனை பெரிய சோதனையை எனக்கு அளித்துள்ளான் என்று மிகவும் வருத்தமாக இருந்தது. அவரது கணவன் மற்றும் அவரது பெற்றோரை அழைத்து அவரது புற்றுநோயை பற்றியும் அதற்கு உண்டான சிகிச்சை முறைகளையும் தெளிவாக விளக்கினேன்.ஆனால் அந்த பெண் அதற்கு பிறகு சிகிச்சை பெற வரவில்லை .அதன்பிறகு நான்கு மாதங்கள் கழித்து அவரது உறவினர் மூலம் அவர் வஃபத்தான செய்தி கேட்டு நிலைகுழைந்து போனேன்.
இதில் தவறு எந்த கட்டத்தில் நடந்துள்ளது என்பதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்
1.அந்த பெண் மார்பகத்தில் சிறிய கட்டியை கண்டவுடன் அதை அசால்ட்டாக எடுத்து கொள்ளாமல் உடனே ஒரு பெண் மருத்துவரை அணுகியிருந்தால் இந்த புற்றுநோயை முதல்கட்டத்திலேயே கண்டு அதற்கு சிகிச்சை அளித்திருக்க முடியும்
2.என்னிடம் வந்த பொழுது கூட ஒரு வார்த்தை அவர் அதை பற்றி கூறவில்லை.எல்லா மருத்துவர்களும் அவர்களுக்கு இருக்கின்ற கால நெருக்கடி காரணமாக எல்லா பரிசோதனையும் செய்ய மாட்டார்கள்.
3.இறைவன் அருளால் அதை கண்டு பிடித்த பின்பும் அவர் சிகிச்சைக்கு பயந்து சிகிச்சை மேற்கொள்ளாமல் விட்டதை எண்ணி நொந்து கொள்வதா?

அறுவை சிகிச்சை மற்றும் மருந்துகள் மற்றும் கதிர்வீச்சு சிகிச்சையிலும் நாம் மாபெரும் வளர்ச்சியை கண்டுள்ள இன்றைய காலக்கட்டத்தில் மார்பக புற்றுநோயால் பெண்கள் இறப்பது என்பது வேதனைக்கு உண்டான விஷயம்.
மார்பக புற்றுநோய் எப்படி வருகிறது?
நம் மார்பகத்திலுள்ள ஒரு செல் மட்டும் ஜெட் வேகத்தில் பிரிந்து வளரத் தொடங்கும் .பின்பு அது படிப்படியாக ஒரு கட்டியாக மாறும்.அந்த செல்கள் எப்போது மற்ற திசுக்களை ஆக்கிரமிக்கத் தொடங்குகிறதோ அப்போது தான் அது கேன்சர் கட்டியாக மாறுகிறது.சில கட்டிகள் வேகமாக வளரும்.ஆனால் சில கட்டிகள் பத்து வருடங்கள் ஆனால் கூட வெளியே தெரியாது.

மார்பக புற்றுநோயின் அறிகுறிகள்….

துவக்கநிலை மார்பக புற்றுநோய் சாதாரணமாக வலியை உண்டாக்காது.மார்பக புற்றுநோய் வளர தொடங்கும்போது எந்தவித அடையாளமும் அறிகுறியும் இருக்காது.புற்றுநோய் வளர வளர கீழ்க்கண்ட அறிகுறிகள் ஏற்படும்
1.வீக்கம் / மார்பகம் அல்லது அக்குள் பகுதி தடிக்கும்
2.மார்பகத்தின் அளவும் வடிவும் மாறுபடும்
3.முலைக் காம்பிலிருந்து இரத்தமோ அல்லது திரவமோ கசியும்.
4.மார்பகத்தின் தோல்,கருப்பு வளையம்,மூலைக்காம்பு முதலியவற்றின் வண்ணம் மாறும்(குழி விழுதல்,மடிப்பு விழுதல்,சொரசொரத்தல்)
5.முலைக்காம்பு உள்ளிழுத்துக் கொள்ளும்
மேற்கண்ட மாறுதல்களில் ஏதேனும் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகவும்.

எவ்வாறு மார்பக புற்றுநோய் கண்டறியப் படுகிறது.???
1.மருத்துவ வரலாறு(Medical History)

உங்கள் குடும்பத்தில் யாருக்காவது புற்றுநோய் இருந்ததா?? மாதவிலக்கு விவரங்கள்,பிள்ளைபேறு அவர்களுக்கு தாய்ப்பால் கொடுத்த விவரங்களை உங்களிடம் மருத்துவர் கேட்டு அதற்கேற்ப சிகிச்சை அளிப்பார்.
2.மார்பக சுயபரிசோதனை
(Self breast examination)
30 வயதை தாண்டிய பெண்கள் மாதத்தின் குறிப்பிட்ட தேதியில்  கண்ணாடி முன் நின்று இரண்டு மார்பகங்களையும் நிதானமாக கூர்ந்து கவனிக்கவேண்டும். மார்பகங்களின் அளவிலோ, உருவிலோ மாற்றங்கள் தெரிகிறதா என்பது பார்க்கவேண்டும்.

அடுத்ததாக மார்புக் காம்பிலிருந்து நீர் அல்லது இரத்தம் கலந்த நீர் வடிகிறதா, மார்புக் காம்பைச் சுற்றியுள்ள கருமையான பகுதியில் புண் ஏதும் இருக்கிறதா, மார்புக் காம்பு உள்ளிழுக்கப்பட்டு இருக்கிறதா, மார்பகங்களில் மேலாகத் தோலின் நிறத்தில் மாறுபாடு தெரிகிறதா, அல்லது அந்த இடத்தில் சொரசொரப்பாக இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.

பின்பு கைகளை தலைக்கு மேலாகத் தூக்கிக்கொண்டு இடது மார்பகத்தை (கடிகாரச் சுற்றில்) வட்ட வடிவில் லேசாக அழுத்தித் தடவி கட்டியோ, தடிப்போ தட்டுப்படுகிறதா என்று ஆராயவேண்டும்.

அதேபோல் இடது கையால் வலதுபுற மார்பகத்தை ஆராயவேண்டும். இப்படி செய்யும்போது, மார்பகத்தை ஒட்டிய அக்குள் பகுதிகளையும் தொட்டுப் பரிசோதனை செய்யவேண்டும்.

இப்படித் தடவி பரிசோதனை செய்யும்போது, விரலின் நுனிப் பகுதியைப் பயன்படுத்தக்கூடாது. பட்டையான விரல் பகுதியைத்தான் பயன்படுத்தவேண்டும்.
இப்படி தன்னைத்தானே மாதந்தோறும் பரிசோதித்துக் கொள்ளும்போது, சின்னதாக மிளகு சைஸில் ஒரு கட்டி இருந்தால்கூட நீங்களே கண்டுபிடித்துவிட முடியும்! இவ்வாறு மாதந்தோறும் சுயபரிசோதனை செய்யாத பெண்கள் என்றாவது ஒரு நாள் கவனிக்கும் போது. எலுமிச்சை அளவு கட்டியை தான் கண்டறிய முடியும்.

3.மருத்துவரிடம் வருடம் ஒருமுறை பரிசோதனை செய்து கொள்ளுதல்(Clinical breast examination)

4.ஸ்கேன் பரிசோதனை(Ultrasound breast)
40 வயதை தாண்டிய பெண்கள் கட்டாயம்
மார்பக ஸ்கேன் செய்து கொள்வது மிகவும் அவசியம்

4.மெமொக்ரேபி(Mammography)
40 வயதை தாண்டிய பெண்கள் வருடம் ஒருமுறை மெமொக்ரேபி செஎக்ஸ் ரே கதிர்கள் மூலம் புற்றுநோயின் ஆரம்ப நிலையை கண்டறிய உதவுவது மேமோக்ரேபி ஆகும்.ஒரு தட்டு போன்ற கருவியால் உங்கள் மார்பகத்தைத் தட்டையாக அழுத்தி மார்பகத்தின் தெள்ளிய வடிவத்தை அறிய முயலப்படும்.

புற்றுநோய் ஏற்படுவதற்கு பிரதான காரணம் பிள்ளைகளை ஈன்றெடுக்கும் தாய்மார்களின் சுயநலம் என்று வைத்தியர்கள் கூறுகின்றார்கள். தாயான பின்னரும் பெண்கள் தங்கள் உடலை கட்டாக வைத்திருந்து கவர்ச்சிகரமான தோற்றத்தை பெறுவதற்காக தாங்கள் பெற்றெடுத்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலை ஊட்டுவதற்கு தயக்கம் காட்டுகிறார்கள்.

குழந்தை பிறந்த முதல் 10 நாட்களுக்கு தாய்ப் பாலை கொடுத்த பின்னர் சில தாய்மார் தங்கள் குழந்தைகளுக்கு புட்டிப்பாலை பழக்கி புட்டிப்பாலை ஊட்டுவதனால் பெண்களின் மார்பகத்தில் இயற்கையாகவே ஊற்றெடுக்கும் தாய்ப்பால் வெளியேறுவதற்கு இடமின்றி மார்பகங்களிலேயே கண்டிப்போகின்றன.

இதுவும் புற்றுநோய் ஏற்படுவதற்கு ஒரு காரணமாகும். சில தாய்மார் தங்கள் மார்பகங்களில் தாய்ப்பால் ஊற்றெடுப்பதை தடுப்பதற்கு சில மருந்து மாத்திரைகளை எடுப்பதும் உண்டு. இதனாலும் இவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் தோன்றுகின்றன. தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு சுமார் 3 முதல் 4 வருடங்களுக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு என்றுமே மார்பக புற்றுநோய் ஏற்படாதென்று புற்றுநோய் வைத்திய நிபுணர் கள் கூறுகிறார்கள்.
மனித குலத்திற்கு அல்லாஹ் அளித்த நன்கொடை தான் குழந்தை.உலகின் இயற்கை வளமான தாய்ப்பால்  நீரோடை அந்த குழந்தையின் வளர்ச்சிக்கு உதவகிறது.
“அவனது பால்குடி மறத்தல்
இரண்டு ஆண்டுகளாகும்” அல்குர்ஆன்(31:14)  என்ற வசனத்தின் மூலம் அல்லாஹ்
நமக்கு தாய்ப்பாலின் அவசியத்தையும் மற்றும் கொடுக்க வேண்டிய அவகாசத்தையும் தெளிவாக விளக்கியுள்ளான்.இன்றைய மருத்துவம் பல ஆராய்ச்சிகளுக்கு பின் கண்டுபிடித்த உண்மையை நமது குர்ஆன் அன்றே நமக்கு உணர்த்தியுள்ளது.அருள்மறை குர்ஆனின் போதனைகளும்,அருள் நபி(ஸல்) அவர்களின் மணிமொழிகளும் மனித வாழ்வின் மறுமலர்ச்சிக்கும்,வணக்கத்திற்கும் நல்ல வழிகாட்டக் கூடியதாக அமைந்துள்ளது.

News

Read Previous

கரு தாங்கிய பெண்ணின் கண்ணீர் காவியம்

Read Next

அழிவின் விளிம்பில் பறவைகள் சரணாலயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *