வைட்டமின் சி – மேலும் சில தகவல்கள்
அறிவியல் கதிர்
வைட்டமின் சி – மேலும் சில தகவல்கள்
பேராசிரியர் கே. ராஜு
வைட்டமின் சி சத்து எளிதில் ஆக்சிஜனுடன் சேரக்கூடியது. சராசரியாக, ஒருவருக்கு ஒரு நாளைக்கு 60 மில்லிகிராம் வைட்டமின் சி தேவை. கர்ப்பமுற்ற பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மேலும் 10-லிருந்து 30 மில்லிகிராம் வரை தேவை. தேவை என்றதும் வைட்டமின் சி அடங்கிய மாத்திரை, மருந்துகளைத் தேட வேண்டாம். நெல்லிக்காய், ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை, தக்காளி, பைனாப்பிள், தர்பூசணி, மாம்பழம், கொய்யாப்பழம், வாழைப்பழம், ஆப்பிள், பசலைக் கீரை, பொதினா, விளாம்பழம், முள்ளங்கி, பச்சை இலைகளுடன் காய்கறிகள், பால், பச்சைப் பட்டாணி, பீட்ரூட், கோஸ், காலிபிளவர், பச்சை மிளகாய், பரங்கிக்காய் போன்ற எண்ணற்ற பொருட்களில் வைட்டமின் சி உள்ளது. உடல் நலன், மன நலனுக்கு…
வைட்டமின் சி பொதுவாக உடல்நலனுக்கு உகந்தது என்றாலும் குறிப்பாக ஆரோக்கியமான தோலினைப் பெறுவதற்கு மிகவும் தேவையானது. புகை பிடிப்பவர்கள், குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு 60 மில்லிகிராமைவிடக் கூடுதலாக வைட்டமின் சி தேவைப்படும். அதே போல் அதிக மனஅழுத்தம் உள்ளவர்கள், காய்ச்சல், கிருமித்தொற்று பீடித்தவர்கள், கர்ப்பமுற்ற பெண்கள், முதியவர்கள் ஆகியோருக்கு வைட்டமின் சி கூடுதலாகத் தேவைப்படும். மூளையில் செரடோனின் என்ற பொருள் உருவாக வைட்டமின் சி தேவை. இந்த செரடோனின் நரம்புகள் வழியாகச் செய்திகளை அனுப்பும் டிரான்ஸ்மிட்டராகச் செயல்படுகிறது. ரத்தத்தில் செரடோனின் போதுமான அளவில் இருப்பது ஒருவரை மகிழ்ச்சியான மனநிலையில் வைத்திருக்க அவசியமானது. ஒருவரது நினைவாற்றலையும் கற்றல் திறனையும் தீர்மானிக்கக்கூடியதாக செரடோனின் இருப்பதால் மாணவர்களுக்கு வைட்டமின் சி அடங்கிய உணவைத் தருவது முக்கியம். கண்களைப் பாதுகாக்கவும் வைட்டமின் சி தேவை. செல்களுடைய வளர்சிதை மாற்றங்களில் வைட்டமின் சி முக்கியமான பங்கினை வகிக்கிறது. உடலின் எல்லா உறுப்புகளுக்கும் போதுமான சக்தி கிடைக்க ரத்த ஓட்டத்தில் வைட்டமின் சி கலந்திருக்க வேண்டும். எலும்புகள், ரத்த நாளங்கள், தசை நாண்கள் பலமாக இருக்க இந்த உயிர்ச்சத்து மிகவும் தேவை. உடலில் உள்ள கொழுப்புச் சத்தினை வைட்டமின் சி கட்டுக்குள் வைக்கிறது. இரும்புச் சத்தை உடல் உள்வாங்கும் திறனை வைட்டமின் சி அதிகரிக்கிறது. வைட்டமின் சி பற்றாக்குறை இருந்தால் ஈறுகளில் ரத்தக் கசிவு ஏற்பட்டு பல் வலி உண்டாகிறது. தமனிகளை விரிவடையச் செய்து மன அழுத்தத்தினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து வைட்டமின் சி ஒருவரைப் பாதுகாக்கிறது. சாதாரண இருமலுக்கும் ஜலதோஷத்திற்கும் வைட்டமின் சி மருந்தாகிறது. புற்று நோயைத் தடுக்கவும் முதுமையைத் தள்ளிப் போடவும் கூட வைட்டமின் சி உதவுகிறது. வைட்டமின் சி கிருமிகளை அழிக்க உதவும் எதிர்ப்பொருட்களை (antibodies) ரத்தத்தில் உருவாக்குகிறது. இதன் காரணமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. வயிற்றுப் புண், முகத்தில் தழும்புகள், பலவீனமான நுரையீரல், கண்-காது-மூக்கில் வரும் நோய்கள், ஒவ்வாமை போன்ற பல்வேறு உடல்நலக் கேடுகளை வைட்டமின் சி பற்றாக்குறை வரவழைக்கக் கூடியது. ரத்தம் உறைவதற்கு வைட்டமின் சி தேவை என்பதால், வைட்டமின் சி பற்றாக்குறை இருந்தால் காயங்கள் ஏற்படும்போது ரத்தப் போக்கு அதிக அளவில் இருக்கும். மொத்தத்தில் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் அற்புதமான வேதிப் பொருள்தான் வைட்டமின் சி. (உதவிய கட்டுரை : ட்ரீம் 2047 ஆகஸ்ட் இதழில் டாக்டர் கிருஷ்ண குமார் மிஷ்ரா எழுதியது).