பனங்கருப்பட்டிதான் மிக உசத்தியானது

Vinkmag ad

நாட்டுவெல்லத்தைக் காட்டிலும், சீனியைக் காட்டிலும் பனங்கருப்பட்டிதான் மிக உசத்தியானது. பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்பு, துத்தநாகம் (Zinc) எனும் கனிமங்களையும் சேர்த்துத் தருவதால்

 

மருத்துவர் கு.சிவராமன்

இந்திய சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல் ‘பாகுபலி’ திரைப்படம். இந்திய மருத்துவ வரலாற்றிலும் ‘பாகு’பலி மைல்கல்லாகிவிடுமோ என ஓர் அச்சம் மேலோங்குகிறது. ஆம்! சீனிப்பாகும் வெல்லப்பாகும் ஏற்படுத்தும் பலிகள் இந்தியாவில் சத்தம் இல்லாமல் நடக்கும் இன்னொரு யுத்தம்.

‘முப்பது வயதில் டயாபடீஸ், முப்பது முதல் நாற்பது வயதுக்குள்ளாகவே நிகழும் மார்பகப் புற்றுநோய்கள், நடுத்தர வயதினருக்கு நடுஇரவில் நிகழும் மாரடைப்புகள்… இவை அனைத்துமே சீனிப்பாகு நடத்தும் பலிகள்’ என்கிறது நவீன அறிவியல். அறிவியலின் விளைவை சாமானியன் வரை அறத்தோடு கொண்டு செல்வதே வளர்ச்சி. அறிவியலில் விளைந்து, சாமானியனை உறிஞ்சுவதற்குப் பின்னப்படும் வணிகக்கண்ணி ஒருபோதும் வளர்ச்சி அல்ல. பாகின் மூலமாக நடத்தப்படும் பலி, இரண்டாம் வகை.

மரபு அரிசியை மாற்றி அதற்கு இனிஷியல் வைத்ததும், எண்ணெயின் படைப்பு மரபையே சிதைத்ததும் வளர்ச்சி என்ற பெயரில் நடத்தப்பட்ட வன்முறைகள் என்பதை உலகம் உணர ஆரம்பித்துள்ள தருணம் இது. ஒரு கோடி மலர்களுக்கு மேல் தாவித் தாவிப் பறந்து, தேனீ நமக்குச் சேமித்துத் தருவதே தேன். நூறு ஆண்டுகளுக்கு நெடுநெடுவென வளர்ந்து நின்று, இனிப்போடு ஏராளமான கனிமங்களையும் நன்நொதிகளையும் சேர்த்து, பனை தரும் இனிப்பே பனங்கருப்பட்டி. இவை தவிர, கரும்பில் இருந்தும் இலுப்பைப் பூவில் இருந்தும் பெறப்பட்ட இனிப்பை வைத்துத்தான், நம் மொத்த நாடும் விழா நாட்களில் இனிப்பை உண்டு மகிழ்ந்தது. ‘நாள் கணக்கில் சேமித்துவைக்க இயலவில்லை; உருகி ஓடுகிறது; தரம் இல்லை’ எனப் பெருவணிகம் ஜோடித்துச் சொன்ன நொண்டிக் காரணங்களைக் காட்டி, அவை அனைத்தையும் ஓரம்கட்டிவிட்டு உருவான வெள்ளை விஷம்தான் சீனி.

‘தலைத் தித்திப்பு’ என பல ஆயிரம் காலமாக இலையில் இனிப்புப் பண்டத்தை முதலில் பரிமாறியவர்கள் நாம். இன்னும் சில நாட்களில் இலையில் ஒரு ‘மெட்ஃபார்மின்’ மாத்திரையை முதலில் வைத்து, பரிமாறலைத் தொடங்கவேண்டி வந்துவிடலாம். ஆனாலும், இப்போதும்கூட உலகில் மிக அதிக அளவில் சீனியைப் பயன்படுத்தும் நாடு இந்தியா. கொஞ்சநஞ்சம் அல்ல… வருடத்துக்கு 26 மில்லியன் டன். விளைவு, உலகிலேயே சர்க்கரை வியாதிக்காரர்கள் அதிகம் இருப்பதும் இந்தியாவில்தான். 35 வருடங்களுக்கு முன்னர், தீபாவளிக்குச் சரியாக இரண்டு நாட்கள் முன்பாக, ரேஷனில் போடும் மூன்று கிலோ சர்க்கரைக்காக கடையின் அழுக்குச்சுவரில் சாய்ந்தபடி, கால்கடுக்க நான்கைந்து மணி நேரம்  நின்றதை என்னால் மறக்க முடியாது. அப்போது சீனியை, இனிப்பாக மட்டுமே தெரியும்; இனிப்புக்குப் பின்னர் நிகழப்போகும் கசப்பான வாழ்வு தெரியாது. ஒவ்வொரு முறையும் தீபாவளி ரிலீஸாகக் களம் இறங்கும் வெள்ளை மைதாவும் வெள்ளைச் சீனிப்பாகும் இணைந்து மிரட்டும் ஈஸ்ட்மென்ட் கலர் பாதுஷாவும் சரி, வெள்ளைப் பாலும் வெள்ளைச் சீனியும் இணைந்து உருக்கும் பால்கோவாக்களும் சரி, கடலை மாவுடன் இரண்டறக் கலந்து இழுக்கும் லட்டு பூந்தியும் சரி, அனைத்துமே நான்கு இன்ச் அளவுள்ள நாவுக்கு இனிமை தந்துவிட்டு, நம் உடம்பில் நான்கு டிரில்லியன் அணுக்களை அடித்துத் துவைக்கும் பொருட்கள் என்பதை மறந்துவிடக் கூடாது!

ஆறு மாதங்களுக்கு முன்னர் அமெரிக்கா  சென்றிருந்தபோது, எனக்கு ஓர் ஆச்சர்ய விஷயம் தென்பட்டது. நான் தங்கி இருந்த ஐந்து ஊர்களின் விடுதிகளில் நான்கில் வெள்ளைச் சீனியே பரிமாறப்படவில்லை. இந்தோனேஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பழுப்பு சர்க்கரை அல்லது பனஞ்சர்க்கரைதான் அத்தனை தேநீர் குவளைகளுக்கு அருகிலும் அடுக்கப்பட்டிருந்தன. ஐரோப்பிய வீடுகளில் வெள்ளைச் சீனி வாங்குவது அரிதினும் அரிது. வெள்ளையர்கள் வெள்ளை மோகத்தில் இருந்து படுவேகமாக வெளியே வருகிறார்கள். நமக்கு இன்னும் தெளியவில்லை. இங்கே ரசாயன இனிப்பு இல்லாத தீபாவளியை இன்னும் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. பலரும் நினைப்பதுபோல வெள்ளைச் சீனி, சர்க்கரை நோயை மட்டும் உருவாக்கவில்லை. சாதாரண சளி – இருமலில் இருந்து, உயிர் பிழை வரை உருவாக்கக்கூடும்!

சர்க்கரை வியாதியும் அதிக உடல் எடையும்தான் புற்றுநோய் உருவாக மிக முக்கியக் காரணிகள். இவை இரண்டுக்குமே நேரடிக் காரணம் வெள்ளைச் சர்க்கரை. புற்றுநோய் உருவாகிய பின்னர், புற்று அணுக்கள் உடலினுள் வேகமாக வளர, பிற உறுப்புக்களுக்குப் பரவ, பிறழ்வுபட்ட மரபணு உருவாக முக்கியக் காரணமாக, அறிவியலாளர்கள் சந்தேகிக்கத் தொடங்கியிருப்பது வெள்ளைச் சர்க்கரையைத்தான். சர்க்கரைச் சத்தை தடாலடியாக ரத்தத்தில் கலக்கவைக்கிறது வெள்ளைச் சர்க்கரை. ‘ஒருவேளை உடலில் புற்று அணுக்கள் இருந்தால் அந்தச் செல்களுக்கு வெள்ளைச் சர்க்கரை, முதல் விருந்தாக அமைந்துவிடும். அது வேகமாக புற்று பரவ வாய்ப்பு அளிக்கும்’ என சில அறிவியலாளர்கள் தொடர்ந்து உரக்கச் சொல்லிவருகிறார்கள். ‘அப்படி எல்லாம் இல்லை; ஆதாரங்கள் போதுமானதாக இல்லை’ என, இன்னொரு பக்கம் வேகமாக வேறு சில அறிவியலாளர்கள் மறுக்கிறார்கள். இங்கே ஒரு விஷயத்தை நாம் நினைவில்கொள்ள வேண்டும். ரேசல் கார்ச்சன் ‘டி.டி.டி-தான் ராபின் பறவையின் அழிவுக்கு காரணம்’ என்றபோதும் ஓர் அறிவியல் கூட்டம் வேகமாக மறுத்தது. ‘புகைப்பிடித்தலுக்கும் புற்றுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை’ என 1940-களில் இங்கிலாந்து ராணிக்கு முன்பாக சூடம் அணைத்து சத்தியம் செய்யாத குறையாக வலியுறுத்தியது. களைக்கொல்லி (Glyphosyte),  ‘மனிதனை ஒன்றும் செய்யாது. ரொம்பச் சமத்தாக்கும்’ என நேற்று வரை வக்காலத்து வாங்கியது. இன்று, ‘இவை எல்லாமே புற்றுக்காரணிகள் விலக்கி வையுங்கள்’ என அதே கூட்டம் அவசர அவசரமாகக் கூக்குரல் எழுப்புகிறது. ஆபத்தின் அடையாளம் தெரியும்போதே அதை விலக்குவது மட்டுமே புத்திசாலித்தனம்.

சீனி குறித்த சர்ச்சை தொடங்கும்போதே அறிமுகப்படுத்தப்பட்ட முதல் செயற்கை இனிப்பு ‘சாக்கரின்’(saccharin) மருந்து மாத்திரை கேக் பிஸ்கட், டயட் பானங்கள் என, பலவற்றில் சேர்க்கப்பட்ட ரசாயனம் இந்த சாக்கரின். இடைக்காலத்தில் சாக்கரினை அதிகம் பயன்படுத்துவதால் சிறுநீர்ப்பை புற்று (Bladder Cancer) ஏற்படுகிறது எனத் தெரிந்ததும், நெடுங்காலம் இதை பல நாடுகள் தடைசெய்து வைத்திருந்தன. மீண்டும் ‘அப்படி எல்லாம் சேட்டை பண்றதா தெரியலை. பயன்படுத்தலாம்’ என சந்தைக்கு வந்துவிட்டது சாக்கரின். அதேபோல் ‘அஸ்பார்டைம்’ எனும் செயற்கைச் சர்க்கரையை ‘குழந்தைகளுக்குக் கொடுக்காதீங்க; குழம்பு, காயில் போடாதீங்க; காபி, டீக்கு மட்டும் கலந்துக்குங்க’ என்கிற அறிவுறுத்தலோடு வியாபாரத்துக்கு வந்தது.

இப்போது சந்தையைக் கலக்கும் ‘சுக்ருலோஸ்’ செயற்கைச் சர்க்கரையோ ‘இதை வைத்து கேசரி கிண்டு; லட்டு பிடி; அல்வா கிளறு…’ என மொத்த வித்தையையும் இறக்கச் சொல்கிறது. ஆனால், டியூக் பல்கலைக்கழகம், எலிகளில் இதை ஆய்வுசெய்து, ‘இதன் மூலம் மிகக் குறைந்த அளவில் பல பிரச்னைகள் உருவாகின்றன’ என அறிவித்தது. சீன தேசிய அறிவியல் கழகத்தின் உதவியுடன் நடைபெற்ற ஓர் ஆய்வு, ‘சுக்ருலோஸை அதிகச் சூட்டோடு பயன்படுத்தும்போது அது டயாக்ஸின் போன்ற (டயாக்ஸின் பிளாஸ்டிக் சிதையும்போது வெளியாகும் நேரடிப் புற்றுக்காரணி)  நச்சை வெளியிடக்கூடும்’ என அறிவிக்கிறது. ‘Polychlorinated dibenzo-p-dioxins’  எனும் இந்த நச்சு,  பழைய ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரத்தில் சமைக்கும்போது உருவாகும் வாய்ப்புதான் அதிகமாம். காபி டபராவில் ஐதீகமாக காபி குடிக்கும் நம்மவர்கள் கொஞ்சம் உஷாராக ‘இப்படியான சர்க்கரையில் சிக்கியிருக்கும் சுக்ருலோஸைப் போட்டுத்தான் இனிப்பை ருசிக்க வேண்டுமா?’ என கொஞ்சம் சிந்தியுங்கள். ஏனென்றால், வாழ்க்கையை அரியரில் இன்னொரு முறை எழுத முடியாது.

எந்த உணவு, சர்க்கரைச் சத்தை ஜீரணத்துக்குப் பின் மெள்ள மெள்ள ரத்தத்தில் கலக்கிறதோ (Low Glycemic Index), எந்த அளவு குறைவாக  (Low Glycemic Load)  கலக்கிறதோ… அதுதான் நலவாழ்வை விரும்பும் எல்லோருக்கும் ஏற்றது. குறிப்பாக புற்றுநோயருக்கு இந்தத் தேர்வு மிக முக்கியம். சமீபத்தில் உலகின் தலைசிறந்த மருத்துவப் பல்கலைக்கழகமான ஹார்வார்டு பல்கலைக்கழகம், முக்கிய 100 உணவுகளில் இந்த கிளைசிமிக் இண்டெக்ஸ் மற்றும் கிளைசிமிக் லோடு குறித்த ஒரு முக்கியப் பட்டியலை வெளியிட்டது. அந்தப் பட்டியலில் ‘பாலீஷ் செய்து பட்டை தீட்டிய வெள்ளை அரிசிதான் மிக அதிக கிளைசிமிக் லோடும் இண்டெக்ஸும் கொண்டது’ எனத் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் ‘பிரவுன் அரிசி’ எனும் உமி நீக்கப்படாத அரிசி, வெள்ளை அரிசியின் கிளைசிமிக் லோடில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு மட்டுமே (வெள்ளை அரிசியின் கிளைசிமிக் லோடு அளவு 43; பிரவுன் அரிசியின் அளவு 16) கொண்டிருப்பதைத் தெரிவிக்கிறது. பட்டை தீட்டாத  நம் நாட்டுச் சிறுதானியங்கள் குறித்த பாரபட்சம் இல்லாத அளவீடுகள் இன்னும் தெரியவில்லை. நிச்சயம் பழுப்பு அரிசியைவிடக் குறைவானதாகத்தான் இருக்கும் என்றாலும், துல்லிய அளவீடுகள் ஆராயப்பட்டதாகத் தெரியவில்லை. தென் அமெரிக்கச் சிறுதானியமான ‘க்யுனோவா’(quinova), பிரவுன் அரிசியைவிட மூன்று புள்ளிகள் குறைவாகத்தான் இருக்கிறது.

புகைப்போருக்கு வரும் சாதாரண வாய்ப் புண்ணோ அல்லது கருப்பையின் வாய்ப்பகுதியில் வரும் புண்களோ Human Pappilloma Virus- சில சேட்டைக்கார வகைகளின் அத்துமீறிய குடியேற்றத்தால் சாதாரண அழற்சியை, புற்றுநோயாக்கிவிடுகின்றன. இந்த மாற்றம் நடக்க வெள்ளைச் சீனியையும், ஹை கிளைசிமிக் உணவுகளான பட்டை தீட்டிய தானியங்களையும் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவது மிக முக்கியக் காரணம். ‘கள்ளினும் காமம் பெரிது’ என வள்ளுவன் சொன்ன கள்ளுக்குப் பொருள் அது மட்டும் அல்ல… எல்லா பெரும் இனிப்புகளும்கூடத்தான். வெள்ளைச் சர்க்கரை வேண்டாமே!

– உயிர்ப்போம்…


பனங்கருப்பட்டி பயன்படுத்துங்கள்

‘அவுக வீட்ல எப்பவும் கருப்பட்டிக் காபிதான். சீனி எல்லாம் கிடையாது’ என ஏழ்மையைக் குறிப்பிட்ட காலம் உண்டு. இப்போது நிலைமை தலைகீழ்.

நாட்டுவெல்லத்தைக் காட்டிலும், சீனியைக் காட்டிலும் பனங்கருப்பட்டிதான் மிக உசத்தியானது. பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்பு, துத்தநாகம் (Zinc)  எனும் கனிமங்களையும் சேர்த்துத் தருவதால், உடலை உறுதிசெய்வதில் முக்கியப் பங்காற்றுகிறது பனங்கருப்பட்டி. குறிப்பாக, Natural Killer Cells மற்றும் IL-2 உருவாக்கம் இரண்டுமே புற்றைத் தடுக்க மிக முக்கியமானவை. வெள்ளை இனிப்பு, இந்தப் பணிகளுக்கு எதிராக இருக்க, கறுப்பு இனிப்பான பனை இதற்குப் பயன் அளிக்கும்.

கூடவே லோ கிளைசிமிக் தன்மை உடையதால், ஒரு குடும்பத்தில் புற்றுநோய் பாரம்பர்யம் இருப்பதாகத் தெரியவரும்பட்சத்தில், வீட்டில் உள்ள மற்ற அனைவருக்கும் குழந்தை முதலே இனிப்பு தேவைப்படும் இடத்தில் எல்லாம் பனங்கருப்பட்டியைப் பயன்படுத்தலாம். ‘லோ கிளைசிமிக் உணவுகள், கருப்பை மற்றும் மார்பகப் புற்றின் வருகையைக் குறைக்கும்’ என்கிறார்கள் நவீன உணவியலாளர்கள்.

இன்னொரு முக்கிய விஷயம், கருப்பட்டியின் பயனும் வணிகமும் கூடியதில் சீனியை வாங்கி பனைச்சாற்றில் விட்டு சேர்த்துக்காய்ச்சி, போலி கருப்பட்டி தயாரிக்கும் கொள்ளைக்கும்பல் தமிழ்நாட்டில் ஆங்காங்கே அதிகரித்துவருவதாகவும் சொல்லப்படுகிறது. நல்ல பனைவெல்லத்தைத் தேடி வாங்குவதும் ரொம்ப முக்கியம்.

News

Read Previous

பாரதி – என் தந்தை

Read Next

டெங்கு பயம் இனி வேண்டாம்; இருக்கிறது 8 வழிமுறைகள்

Leave a Reply

Your email address will not be published.