பாரதி – என் தந்தை
பாரதி – என் தந்தை
இப்போது
என் பேனாவிற்கு
இடுப்பு வலி?
ஏனென்றால்-
பெற்றெடுத்த தந்தையையே
நான்
பிரசவிக்க வந்துள்ளேன்.
அதனால்
என் பேனாவிற்கு
இப்போது
இடுப்பு வலி.
பாரதி – என் தந்தை !
என் தந்தையை உங்களுக்கு
அறிமுகப்படுத்துவதில்
நான்
ஆனந்தம் கொள்கிறேன் !
ஏனென்றால் –
அவன்
அன்னைத் தமிழை
அகில உலகுக்கும்
அறிமுகப்படுத்தியவன் !
பாரதியை
தந்தையென்று நான்
தனிஉரிமை கொண்டாட
யாரும்
தடைபோட மாட்டார்கள் !
ஏனென்றால்
பொருள் சேர்த்து
வைத்திருந்தால் தானே
புதல்வர்களிடையே
போட்டு வரும்?
அவனோ
காசு பண ஆசைகளைத்
தூசி போலத்
துடைத்தவன் அல்லவா?
பாரதி – என் தந்தை !
நானோ ஒரு
வித்தியாசமான
குழந்தை !
நான் குடித்த பால்-
தாய்ப் பாலல்ல
தந்தைப் பால் !
தந்தை பால் நான்
தந்தை பால் அருந்தியவன் !
அதனால்-
அப்பா பிள்ளையா
அம்மா பிள்ளையா – என்று
எப்போது கேட்டாலும்
தப்பாது சொல்வேன்
நான்
அப்பா பிள்ளைதான் !
ஓர்
அப்பாவிப் பிள்ளைதான் !
என் தந்தையுடைய
இதய
வெள்ளைத் தாளில்
சிறிய என்பேனா
சில சமயம்
கீறிய துண்டு.
அப்போதெல்லாம்
காயங்களை
அவன் வாங்கிக்கொண்டு
கவிதைகளை
எனக்களித்தான் !
அவன் எனக்குப்
புத்தகங்கள்
வாங்கிக் கொடுத்தான் !
சொற்புதிது – பொருள் புதிது
சுவைபுதிது – வளம் புதிது
என்று
அவனே ஒரு
புதுமையான
புத்தகமாகவும் இருந்தான் !
அவன்
கொடுத்த புத்தகத்தைப்
படித்து முடித்துவிட்டேன்.
அவனைத்தான்
இன்னும் கூட
படித்து முடிக்காமல்
பாக்கி வைத்திருக்கிறேன் !
ஒவ்வொரு முறை
படிக்கும் போதும்
ஒவ்வொரு விதமாய்-
தர்மமாய்
தைரியமாய்
ஞானமாய்
நாணமாய்
ஓ !
புரிகிறது …
அவன் ஒரு
புத்தகமல்ல-
புத்தகசாலை !
( ஒரு வானம் இரு சிறகு – மு.மேத்தா எழுதிய நூலிலிருந்து )