சுகாதாரத்திற்கு ஒரு ‘சுன்னத்து’
– மௌலவி, அ.மு. கான் பாகவி
காலம் காலமாகக் கலாசாரங்களில் இருந்துவரும் சில பழக்கங்கள் ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகாட்டிவருகின்றன. அறிவியல் காரணங்களை ஆராய்ந்து இவை உருவாக்கப்படவில்லை. பிற்காலத்தில்தான் இவற்றுக்கு அறிவியல் அங்கீகாரம் கிடைத்திருக்கின்றன.
இவற்றுள் ஒன்றுதான் ‘சுன்னத்து’ எனப்படும் விருத்தசேதனம் (Circumcision) எனும் பழக்கம். ஆண் குழந்தை பிறந்தவுடன், அல்லது பிறந்து சிறிது காலம் கழித்து ஆண்குறியின் முன்தோலை அகற்றுவதே ‘சுன்னத்து’ எனப்படுகிறது.
எகிப்தியரிடமும் யூதர்களிடமும் இப்பழக்கம் நீண்டகாலமாக இருந்துவருகிறது. கட்டாயம் கிடையாது என்றாலும் கிறித்தவர்கள் சிலரிடமும் இப்பழக்கம் உண்டு. அமெரிக்காவில் 8 முதல் 61 விழுக்காடு குழந்தைகளுக்கு சுன்னத்து செய்யப்படுகிறது. முஸ்லிம்கள் கட்டாயமாக இதைக் கடைப்பிடித்துவருகின்றனர்.
நாவிதரைக் கொண்டு முன்தோல் அகற்றும் முறை இன்றும் நடைமுறையில் இருந்தாலும் அறுவை சிகிச்சைமூலம் அகற்றப்படுவதே அதிகம். குழந்தைப் பருவத்தில் ‘சுன்னத்து’ செய்வதுதான் எளிதானது; பிறவி உறுப்பில் நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க வல்லது.
இதிலுள்ள மருத்துவப் பலன்களை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர். ஆண்குறி புற்றுநோயை இது தடுக்கும் என்று கூறுகின்ற ஆய்வாளர்கள், சுன்னத்து செய்யாத ஆண்களுக்குச் சிறுநீர்ப்பையில் நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்கின்றனர்.
அமெரிக்க மருத்துவ இதழ்களில் நூற்றுக்கணக்கான ஆய்வுக்கட்டுரைகள் ‘சுன்னத்து’ தொடர்பாக வெளிவந்துள்ளன. அமெரிக்காவின் Family Physician இதழில் 1990 மார்ச்சில் ஓர் ஆய்வுக் கட்டுரை வெளிவந்தது. வாஷிங்டன் இராணுவ மருத்துவமனை குழந்தைகள் பிரிவு தலைவர் பேராசிரியர் Wisewell இக்கட்டுரையை எழுதியிருந்தார். “சுன்னத்துச் செய்யாத குழந்தைகள் சிறுநீர் நோய்த்தொற்றுக்கு அதிகமாக ஆளாகிறார்கள்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
குழந்தைகளின் ஆரோக்கிய வாழ்விற்கு சுன்னத்து முறை வழிவகுக்கிறது –என 1988இல் கலிபோர்னியா மருத்துவக் கழக உறுப்பினர்கள் வெளியிட்ட அறிக்கை தெளிவுபடுத்தியது. சுன்னத்துச் செய்வதால் குழந்தைகளின் பாலுறுப்பு சுகாதாரம் ஆயுள் முழுக்கப் பாதுகாக்கப்படுகிறது; முன்தோலில் நோய்க்கிருமிகள் சேர்வதை இது தடுக்கிறது – என்று இங்கிலாந்தின் பிரபல குழந்தைகள் மருத்துவர் டாக்டர் ஷவீன் கூறினார். ‘The New England Journal of Medicine’ எனும் இதழில் இதனை அவர் 1990ஆம் ஆண்டிலேயே வெளியிட்டார்.
பிரிட்டனின் மருத்துவ இதழான B.M.J. (1987) வெளியிட்ட ஆய்வொன்று, “யூதர்களிடமும் முஸ்லிம் நாடுகளிலும் பாலுறுப்பு புற்றுநோய் அரிதாகவே உள்ளது” என்று தெரிவித்தது.
சுன்னத்துச் செய்வதால் பல்வேறு பால்வினை நோய்களிலிருந்து தப்பலாம். ஆஸ்திரேலியாவில் நடந்த புதிய ஆய்வொன்று இதை உறுதி செய்கிறது. பரம்பரை தோல்நோய், கருப்பை நோய், மேகவெட்டை, மேகப்புண் ஆகிய பால்வினை நோய்கள் சுன்னத்துச் செய்யாதவர்களிடம் அதிகமாகக் காணப்படுகின்றன என்கிறது அந்த ஆய்வு. இதிலிருந்து சுன்னத்துச் செய்யாத ஆண்கள் மட்டுமன்றி, அவர்கள் உறவுகொள்ளும் பெண்களும் (கருப்பை நோய்மூலம்) பாதிக்கப்படுகின்றனர் என்று தெரிகிறது.