நம் கையில் இருப்பது ஒரே ஒரு புவிக் கோள்..
நம் கையில் இருப்பது ஒரே ஒரு புவிக் கோள்..
கடந்த இருபதாண்டுகளில் சூழலியலாளர்களிடையே அதிகம் உச்சரிக்கப்பட்ட சொற்கள் புவிவெப்பமாதல், பருவநிலை மாற்றம், பசுங்குடில் விளைவு, கரிம உமிழ்வு போன்றவையாகும். இந்தச் சொற்கள் நம் அன்றாடத்தின் ஒரு பகுதியாக மாறவில்லை என்றாலும் அவை குறிப்பிடும் விளைவுகள் நம் அன்றாடத்தை வெகுவாகப் பாதித்துவருகின்றன. எனினும், இதற்கெல்லாம் நான் காரணமில்லை என்பதுபோல்தான் நம் எதிர்வினைகள் இருக்கின்றன. உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வுக்கு நாம் ஒவ்வொருவரும் எந்த அளவுக்குப் பொறுப்பேற்புடனும் அக்கறையுடனும் நடந்துகொள்ள வேண்டும் என்பதை கரோனா பெருந்தொற்று நமக்கு உணர்த்தியிருக்கிறது. இதே அக்கறையையும் பொறுப்பேற்பையும் சூழலியல் தொடர்பாகவும் நாம் வெளிப்படுத்த வேண்டும் என்பதை ஆக்ஸ்ஃபாம் அமைப்பும் ஸ்டாக்ஹோம் சூழலியல் நிறுவனமும் சேர்ந்து வெளியிட்டிருக்கும் அறிக்கையைப் பார்க்கும்போது தோன்றுகிறது.
1990-2015 வரையில் வெளியிடப்பட்ட கார்பன் டையாக்ஸைடு உமிழ்வு தொடர்பான தரவுகளை வைத்து இந்த அறிக்கை உருவாக்கப்பட்டிருக்கிறது. மேற்கண்ட 25 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ஒட்டுமொத்த கார்பன் டையாக்ஸைடு உமிழ்வுக்கு உலக மக்கள் தொகையின் 50% ஏழைகளைவிட 1% பணக்காரர்கள்தான் இரண்டு மடங்கு பொறுப்பு என்று இந்த அறிக்கை கூறுகிறது. 1990-க்கும் முந்தைய ஆண்டுகளில் வெளியிடப்பட்ட கார்பன் டையாக்ஸைடைவிட கடந்த 25 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட கார்பன் டையாக்ஸைடு 60% அதிகம் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது. 50% ஏழைகளைவிட 1% பணக்காரர்கள் வெளியிட்ட கார்பன் டையாக்ஸைடு அதிகரிப்பின் விகிதம் மும்மடங்கு அதிகமாகும்.
உயரும் கடல் மட்டம்
நாம் வெகு வேகமாக ‘கரிம பட்ஜெட்’டைத் தீர்த்துக்கொண்டுவருகிறோம் என்று இந்த அறிக்கை கூறுகிறது. ‘கரிம பட்ஜெட்’ (கார்பன் பட்ஜெட்) என்பது ஒருவிதக் கணக்கு. இதன்படி, வளிமண்டலத்தில் குறிப்பிட்ட அளவு வரைதான் கார்பன் டையாக்ஸைடை வெளியிட முடியும். அந்த எல்லையைத் தொட்டால் பேரழிவுகள் ஏற்படும். உலகம் தொழில்மயமாவதற்கு முன்பிருந்த வெப்பநிலையைவிட 2 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை அதிகமாகும்.
ஏற்கெனவே, உலகின் கணிசமான இடங்கள் 1.5 டிகிரி செல்ஸியஸைத் தாண்டிவிட்டிருக்கின்றன. இதனால், துருவப் பகுதிகளின் பனி உருகி கடல் மட்டம் அதிகரித்துவருகிறது. 1.5 டிகிரி செல்ஸியஸால் 0.1 மீட்டர் அளவுக்குக் கடல் மட்டம் உயர்ந்திருக்கிறது. 2 டிகிரி செல்ஸியஸைத் தொடும்போது 0.2 மீட்டர் அளவுக்குக் கடல் மட்டம் அதிகரிக்கும். அதைத் தொடர்ந்து மண் அரிப்பு, கடல் எல்லை அதிகரிப்பு, குடியிருப்புப் பகுதிகளில் கடல்நீர் புகுதல், குடிநீரெல்லாம் உவர்ப்பாதல் போன்ற விளைவுகள் ஏற்படும்.
நம் கையில் இருப்பது இந்தப் புவிக் கோள் மட்டும்தான் எனும் நிலையில் நாம் மிகுந்த பொறுப்புணர்வோடு நடந்துகொண்டிருக்க வேண்டும். குறிப்பாக, உலகத்தின் மிகக் குறைந்த சதவீதமுள்ள பணக்காரர்கள் தங்கள் நுகர்வைக் குறைத்துக்கொண்டாலே அது நீடித்த நல்விளைவுகளை ஏற்படுத்தும். நமது கார்பன் பட்ஜெட்டை ஊதாரித்தனமாக நாம் செலவிட்டு வருவதைப் பார்க்கும்போது நமக்கு அடுத்த தலை முறையில் அல்ல; நம் தலைமுறையிலேயே அதன் தீமைகளை நாம் அனுபவிக்க நேரிடும் என்பது தெளிவாகத் தெரிகிறது. கூடுதல் பொறுப்புணர்வும், அக்கறையும் மட்டுமே நாமிருக்கும் இந்தக் கோளைக் காப்பாற்றும்.
– (செப்டம்பர் 29 தமிழ் இந்துவில் ஆசை எழுதிய கட்டுரையிலிருந்து)