சார்ஜாவில் சார்ஜா இஸ்லாமிய வங்கி
சார்ஜாவில் அமீரகத்திலேயே முதல் முறையாக சார்ஜா இஸ்லாமிய வங்கியின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வையற்றோருக்கு உதவிடும் வகையில் பேசும் ஏ.டி.எம் எந்திரம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
சார்ஜாவில் சார்ஜா இஸ்லாமிய வங்கி மற்றும் சார்ஜா நகர மனிதநேய சேவைகள் அமைப்பு சார்பில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வையற்றோர்கள் பயன்படுத்துவதற்காக நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள பேசும் ஏ.டி.எம் எந்திரம் நிறுவப்பட்டுள்ளது.
இந்த ஏ.டி.எம் மையத்தை சார்ஜா நகர மனிதநேய சேவைகள் அமைப்பின் பொது இயக்குனர் ஷேக்க்கா ஜமீலா பிந்த் முகம்மது அல் காஸிமி தொடங்கி வைத்தார். இந்த ஏ.டி.எம் எந்திரத்தில் பார்வையற்றோர்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் அதன் பொத்தான்கள் பிரெய்லி முறையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இயர் போன்கள் அளிக்கப்பட்டு அதன் செயல்பாடுகளை விளக்கும் வகையில் வசதி செய்து தரப்பட்டுள்ளது.
இதில் தேவையான தகவல்களை அனைத்தும் ஆங்கிலம் மற்றும் அரபி மொழியில் பெறப்படும் வகையில் வசதி செய்துதரப்பட்டுள்ளது.
மேலும் சக்கர நாற்காலியில் அமர்ந்து அதை பயன்படுத்தும் விதத்தில் தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக சக்கர நாற்காலிகளும் அதில் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஏ.டி.எம் மையத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வையற்றோர் யார் உதவியும் இல்லாமல் தாங்களாகவே பயன்படுத்திக்கொள்ளலாம். அவர்களை வழிகாட்ட குரல் வழியில் அனைத்து செயல்பாடுகளும் தெரிவிக்கப்பட்டு கொண்டே இருக்கும். இதற்காக மென்பொருளில் அனைத்தும் முன்னதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த எந்திரம் பார்ப்பதற்கு மனிதர்களுடன் உரையாடுவதை போன்று செயல்படுகிறது. இதன் மூலம் பார்வையற்றோர் சாதாரண மக்களை போலவே விரைவாக பணம் எடுத்துக்கொள்ள முடியும். மாற்றுத்திறனாளிகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அவர்களுக்கு சமமான வாய்ப்புகளை சமூகத்தில் வழங்க இந்த முயற்சியானது எடுக்கப்பட்டுள்ளதாக அந்த வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags: சார்ஜா சார்ஜா இஸ்லாமிய வங்கி