கலாம் கீதம்
கலாம் கீதம் -ஆண்டு நினைவில்
அரியதோர் அர்ப்பணம்!
சிங்கப்பூரின் சிறந்த கவிஞரும், கவிமாலை அமைப்பின் தலைவருமான கவிஞர் இறைமதி அவர்களை முதலில் பாராட்டுவோம். கலாம் அவர்களின் இன்றைய நினைவு நாளையொட்டி ’யூ ட்யூப்’ வெளியிட்ட ’கலாம் கீதம்’ இசை வடிவத்தின் உயிர் நாடி, இவரின் கவிற் சொற்கள்! ஆகவே தான் இந்தப் பாராட்டு.
பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக அமைய வேண்டும் என்றவர் இந்திய மண்ணில் வரலாறு கண்ட முன்னாள் அதிபர் அப்துல் கலாம் அவர்கள். சாதாரணப் பிறவியாகப் பிறந்து, அசாதரணமாக வாழ்ந்து மறைந்த அன்னார், இன்று சரித்திரமாக நம்மோடு வாழ்பவர். மறைந்தும் மறையாத அப்துல் கலாம் அவர்களுக்கு இன்று 3ம் ஆண்டு நினைவு நாள்!
இதனையொட்டி ‘யூ டியூப்’பில் இன்று வெளியான ‘கலாம் கீத’த்தில் நம் சிங்கப்பூர் கவிஞர் இறைமதியின் கவிதை வாழ்வாங்கு வாழ்கிறது!
இளைய இசை மேதை வர்ஷன் சதீஷின் துடிப்பான இசை, தங்கு தடையின்றிக் கரை புரள்கிறது.
இன்றைய இளய இசை முத்திரை சங்கர் மகாதேவனின் கொட்டி முழக்கும் குரல் வளத்தில் கட்டுக்கடங்காத குதூகல ஆற்றுப் பெருக்கு!
குழந்தைக் கோலங்களின் அழகுப் பின்னணியில், காலத்தை வென்ற கலாமின் பூக் கனவு பூத்துக் குலுங்குவதைக் காண்கிறோம்.
பெரும் பணச் செலவில், பலரின் அரும்பெரும் முயற்சியில் உருவாகி, இன்று உலகெங்கும் ஒலிக்கும் ’கலாம் கீதம்’, எங்கள் சிங்கைக் கவிஞன் இறைமதியின் எழுச்சி ஒட்டம் என்பதில் நாம் ! பெருமைப்படுகிறோம்.
’கலாம் கீதம்’ காணொளி உருவக்கத்தின் நோக்கம் பற்றி கவிஞர் இறைமதி என்ன கூறுகிறார்?
”மூன்று ஆண்டுகளுக்கு முன் எழுதிய சொல் வரிசை இது. இன்று அது கலாம் அவர்களின் புகழைப் போற்றும் பாடலாக, அவரின் அளவற்ற அன்பிற்கும், அர்ப்பணிப்பான வாழ்க்கைக்கும் நம் நன்றிக் கடனாக அமையு ம் ஒலி/ஒளி வட்டாக அமையும் என நான் எதிர்பா ர்த்ததில்லை. இதனை உருவாக்க உதவிய அனைவருக்கும் நெஞ்சுணர்வுடன் கூடிய நன்றியைத் தெரிவிக்கிறேன். தாய் உள்ளம் கொண்ட தந்தை அப்துல் கலாம் அவர்களின் புகழ் பரவ அனைவரும் துணை நிற்போம்.” என்று அடக்க உணர்ச்சியுடன் கூறினார் கவிஞர் இறைமதி.
‘கலாம் கீதம்’ வெளிவரப் பல்லாற்றாலும் உழைத்த கவிஞர் இறைமதிக்கு நம் பாராட்டுகள்!
தமிழ்ப் பள்ளிகளிலும் – ஆங்கில விளக்கங்களுடன் மற்ற மொழிப் பளிளிகளிலும் இதனைப் பார்க்க, கேட்க நம் தமிழ்ப் பற்றாளர்கள் முனைய வேண்டும். –ஏபிஆர்.
என்றும் அன்புடன் உங்கள்