ஜனவரி 25முதல் பிப்.2 வரை ராமநாதபுரத்தில் புத்தகத் திருவிழா
ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் வரும் ஜனவரி 25 ஆம் தேதி முதல் பிப்ரவரி 2 ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா நடத்தப்படும் என ஆட்சியர் க.நந்தகுமார் திங்கள்கிழமை தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புத்தகத் திருவிழா நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் க.நந்தகுமார் தலைமையில் நடந்தது.
கூட்டத்திற்கு பின்னர் ஆட்சியர் கூறியது: ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகமும், தேசிய புத்தக நிறுவனமும் இணைந்து ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் வரும் ஜனவரி 25 ஆம் தேதி முதல் பிப்ரவரி 2 ஆம் தேதி வரை புத்தகத் திருவிழாவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திருவிழாவில் 100க்கும் மேற்பட்ட அரங்குகளில் பள்ளி,கல்லூரி மாணவ, மாணவியர், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் பயன்பெறும் வகையில் அனைத்து வகையான புத்தகங்களும் இடம்பெறவுள்ளன.
வேலை நாட்களில் மதியம் 2 மணி முதல் 8 மணி வரையும், விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் 8 மணி வரையும் நடைபெறும். இத்திருவிழாவிற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் பட்டிமன்றங்கள், வேலைவாய்ப்பு மற்றும் போட்டித் தேர்வினை எதிர்கொள்வது தொடர்பான விளக்கங்கள், சிறந்த பேச்சாளர்களின் கலந்துரையாடல்கள் ஆகியனவும் இடம் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இவை தவிர பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளையும் நடத்துகிறோம்.
இப்புத்தக திருவிழாவின் இன்னொரு சிறப்பு அம்சமாக நமது பாரம்பரிய உணவுப் பழக்கத்தை பறைசாற்றும் வகையில் உணவுத்திருவிழாவும் நடத்தப்படும். இதில் பல்வேறு வகையான பாரம்பரிய உணவுகளை கொண்ட அரங்குகள் அமைக்கப்படவுள்ளது என ஆட்சியர் க.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.