நிருபர்கள் என்றால் யார்?

Vinkmag ad

நிருபர்கள் என்றால் யார்?

செய்தி சேகரிப்பவர்கள் செய்தியாளர்கள் (நிருபர்கள்) எனப்படுகிறார்கள். செய்தி நிறுவனங்கள் இத்தகைய நிருபர்களை பல்வேறு இடங்களில் பணி நிமித்தம் செய்து உடனடியாக செய்திகளை சேகரித்து தங்களது ஊடகங்களின் (media) மூலம் மக்களுக்கு கொண்டு செல்வார்கள். இவர்கள் நேர்காணல், கவனித்தல், ஆய்வுசெய்தல் மூலம் செய்திகளைச் சேகரிப்பார்கள். தேர்ந்த செய்தியாளர்களாவதற்கு உலகில் பல்வேறு நாடுகளிலும் பட்டப்படிப்புகளும் பட்டயப்படிப்புகளும் உள்ளன.

செய்தியாளர் வகைகள்

செய்தியாளர்களை அவர்கள் பணியின் இயல்பு, பணியமைப்பு, தொழில் திறன் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தலாம். 1.இயல்பு வகைகள் செய்தியாளர்கள் செய்யும் பணியின் இயல்பை ஒட்டி அவர்களை 4 வகையாகப் பிரிக்கலாம்.

  1. நகரச் செய்தியாளர் – செய்தித்தாள்/தொலைக்காட்சி ஊடகம் அமைந்துள்ள ஊரிலுள்ள செய்திகளைத் திரட்டும் செய்தியாளர். இவர்களை உள்ளூர் செய்தியாளர் என்றும் அழைப்பதுண்டு.
  2. நகர்ப்புறச் செய்தியாளர் – மாநிலத்திலுள்ள மாவட்டத் தலைநகரிலிருந்து செய்திகளைச் சேகரித்து அனுப்பும் செய்தியாளர்.
  3. தேசியச் செய்தியாளர் – நாட்டிலுள்ள மாநிலத் தலைநகரிலிருந்து செய்திகளைச் சேகரித்து அனுப்பும் செய்தியாளர்.
  4. வெளிநாட்டுச் செய்தியாளர் – வெளிநாடுகளில் தங்கி உலகச் செய்திகளைச் சேகரித்து அனுப்பும் செய்தியாளர்.

2.பணி வகைகள் செய்தியாளர்கள் பணியை வைத்தும் அவர்களை 4 வகையாகப் பிரிக்கலாம்.

  1. பகுதிநேரச் செய்தியாளர் (Reporter) – செய்தித்தாள்/தொலைக்காட்சி ஊடகத்தின் நேரடிப் பணியாளராக இல்லாது, அனுப்புகின்ற செய்திகளுக்கேற்ப பணம் பெற்றுக் கொள்பவர்.
  2. செய்தியாளர் (Correspondent) – செய்தித்தாள்/தொலைக்காட்சி ஊடகத்தின் முழு நேரப் பணியாளராக இருந்து கொண்டு செய்திகளைத் திரட்டித் தருபவர்.
  3. மன்றச் செய்தியாளர் (Lobby Correspondent) – நாடாளுமன்றம், சட்டமன்றம் போன்றவற்றின் நடவடிக்கைகளைக் கொண்ட செய்திகளை அளிப்பவர்.
  4. சிறப்புச் செய்தியாளர் (Special Correspondent) – ஒரு குறிப்பிட்ட நிகழ்வையோ அல்லது வெளிநாடு செல்லும் தலைவர்களைத் தொடர்ந்து அது குறித்த செய்திகளைத் திரட்டித் தருபவர்.

3.தொழில் திறன் வகைகள் செய்தியாளர்கள் தொழில் திறனை வைத்து அவர்களை 3 வகையாகப் பிரிக்கலாம்.

  1. செய்தியாளர் (Reporter) – பார்ப்பதை அப்படியே எழுதுபவர்.
  2. விளக்கச் செய்தியாளர் (Interpretative Reporter) – பார்ப்பதுடன் தான் ஊகித்துணர்வதையும் சேர்த்துத் தருபவர்.
  3. செய்தி வல்லுநர் (Expert Reporter) – பார்க்காதவற்றைக் கூட அதன் பொருள் இதுதானென்று தீர்மானித்து சிறப்பாகத் தருபவர்.

4.செய்தியாளருக்கான பண்புகள் செய்தியாளர் சிறந்த செய்தியாளராகத் திகழ வேண்டுமானால் அவரிடம் கீழ்காணும் தகுதிகள்/பண்புகள் இருக்க வேண்டும்.

  1. செய்தி மோப்பத் திறன்
  2. நல்ல கல்வியறிவு
  3. சரியாகத் தருதல்
  4. விரைந்து செயல்படல்
  5. நடுநிலை நோக்கு
  6. செய்தி திரட்டும் திறன்
  7. பொறுமையும் முயற்சியும்
  8. சொந்த முறை
  9. நல்ல தொடர்புகள்
  10. நம்பிக்கையைக் கட்டிக் காத்தல்
  11. நேர்மை
  12. கையூட்டுப் பெறாமை
  13. செயல் திறன்
  14. ஏற்கும் ஆற்றல்
  15. தன்னம்பிக்கை
  16. இனிய ஆளுமை
  17. தெளிவாகக் கூறும் ஆற்றல்
  18. மரபுகளைப் பற்றிய அறிவு
  19. சட்டத் தெளிவு

5.செய்தியாளரின் கருவிகள்

ஒவ்வொரு தொழிலையும் திறமையாகச் செயல்படுத்த அதற்கென சில கருவிகள் தேவைப்படுகிறது. செய்தியாளருக்கும் அது போன்று சில கருவிகள் தேவையாக உள்ளது.

  1. மொழியறிவு
  2. தட்டெழுத்துப் பயிற்சி
  3. சுருக்கெழுத்துப் பயிற்சி
  4. குறிப்பேடு, எழுது பொருள்கள்
  5. தகவல் கோப்பு
  6. எதிர்கால நாட்குறிப்பு
  7. இணையம் பயன்படுத்தும் திறன்

செய்தியாளரின்தகுதிகள்

ஒரு செய்தியாளர் திறமை மிக்க செய்தியாளராக விளங்க வேண்டும் என்றால் அவரிடம் சில தகுதிகளும் பண்புகளும்கட்டாயம் இருக்க வேண்டும். அவற்றை இங்கு விளக்கலாம்.

  • செய்தி மோப்பத் திறன் (Nose for News)

செய்தியாளர் செய்திகள் கிடைக்கும் இடத்தை மோப்பம்பிடிக்கும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும். செய்தியைக்கண்டவுடன் அவர்களது மூக்கு வியர்க்க வேண்டும்.அவர்களிடம் செய்தி உள்ளுணர்வு எப்பொழுதும் விழித்திருக்க வேண்டும். நல்ல செய்தியாளர் எப்பொழுதும் செய்திக்குப் பசித்திருப்பவ -ராகவும், செய்தியைக் கண்டுகொள்ள விழித்துஇருப்பவராகவும், சொல்லும் முறையில் தனித்துஇருப்பவராகவும் விளங்க வேண்டும்.

  • நல்ல கல்வி அறிவு

செய்தியாளர் போதுமான அளவு கல்வியறிவு பெற்றிருக்கவேண்டும். எல்லாவற்றையும் பற்றி அறிவும் ஆர்வமும்பெற்று இருக்க வேண்டும். அவர்களுக்கு எல்லாத்துறைகளைப் பற்றியும் ஆழமான தெளிவு இருந்தா ல்தான்அவற்றைப் பற்றிய செய்திகளை நுட்பமாகவும் ஆழ்ந்தும் முழுமையாக -வும் அளிக்க முடியும்.

  • சரியாகத் தருதல்

செய்திகளைச் சரியாகவும் துல்லியமாகவும் (Accuracy)தருகின்ற பண்பு செய்தியாளருக்கு இருக்க வேண்டும்.எதனையும் சரிபார்க்காமல் ஊகம் செய்து எழுதக்கூடாது.அப்படி எழுதினால் சிக்கலில் மாட்டிக் கொள்ள நேரிடும். ‘எதனையும் முதலில் பெற வேண்டும், அதனையும் சரியாகப் பெற வேண்டும்’ என்பது தான் செய்தியாளரின் குறிக்கோளாகஇருக்க வேண்டும்.

  • விரைந்து செயல்படல்

செய்தியாளர் வியப்பூட்டும் வகையில் விரைவாகச் (Speed) செயல்பட வேண்டும். செய்தித்தாளின் இறுதிப் பக்கம் தயாராகும் முன்பு, திறமையான செய்தியாளர் தான் சேகரித்த செய்திகளை அனுப்புவார். செய்தியைச் சரியாகப் பெறவேண்டும்; உடனேயும் பெற வேண்டும் என்பதனைக்கவனத்தில் கொள்ள வேண்டும்.

  • நடுநிலை நோக்கு

தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்கு ஆட்படாமல்செய்தியாளர் நடுநிலை நின்று செய்திகளைச் சேகரித்து அனுப்பவேண்டும். சொந்தக் கருத்துகளைச் செய்திகளோடு சேர்த்து எந்தச் சமயத்திலும் கூறக்கூடாது. செய்தியின் முக்கியத்துவத்தை மாற்றவோ, கோணத்தை வேறுபடுத்தவோ, வண்ணம் பூசவோ முயலக் கூடாது.

*செய்தி திரட்டும் திறன்

செய்தி கிடைக்கும் இடத்தை அடைந்து செய்தியைஇனங்கண்டு உண்மையான விவரங்களைத் திரட்ட வேண்டும்.சேகரித்த செய்தியை முறைப் படுத்தி, செய்தியாக வடிவம் அமைத்துத் தரும் ஆற்றல் செய்தியாளருக்கு இருக்கவேண்டும். இத் திறனைப் பயிற்சியின் மூலமாகவும் பட்டறிவின் வாயிலாகவும் பெற இயலும்.

  • பொறுமையும், முயற்சியும்

செய்தியாளருக்கு மிகுந்த பொறுமைக் குணம் வேண்டும்.அவசரப் படவோ பதற்றப் படவோ கூடாது. பதறிய காரியம்சிதறும் என்பது பழமொழி. செய்தியை அறிந்தவர்களைத்தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம், உண்மையை வரவழைத்து, அதனைச் செய்தியாக எழுதி அலுவலகத்திற்கு அனுப்புகின்ற வரை பல இடையூறுகள் ஏற்படலாம். அவற்றை எல்லாம்மனத்தளர்ச்சி இன்றி முயற்சி திருவினை யாக்கும் என்றதெளிவோடு செயல்படுகிற செய்தியாளர் களால் தான்அரிய செயல்கள் செய்ய முடியும்.

  • சொந்தமுறை அல்லதுதனித்தன்மை

செய்தியாளர் செய்திகளைத் திரட்டுவதிலும் தனக்கென்று ஒரு தனித்தன்மையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.மற்றவர்களைப் பின்பற்றக் கூடாது. சிறந்த செய்தியாளர்கள்செய்திகளைத் திரட்டித் தருவதில் தனி முத்திரை இருக்கும்.

  • நல்ல தொடர்புகள்

செய்தியாளர் பல தரப்பட்ட மக்களோடு நெருங்கியதொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறுதொடர்புள்ளவர் சிறந்த செய்தியாளராகத் திகழ முடியும்.மக்கள்தாம் செய்தியின் மூலங்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

  • நம்பிக்கையைக் கட்டிக்காத்தல்

செய்தி தருகின்றவர்கள் தங்கள் மீது பத்திரிகையும் பொதுமக்களும் வைத்திருக்கும் நம்பகத் தன்மையைக்கட்டிக் காக்க வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் செய்திகொடுக்கிறவரைக் காட்டிக் கொடுக்கக் கூடாது. செய்தி தருகின்றவருக்குக் கொடுக்கும் வாக்குறுதியை எப்படியும் நிறைவேற்ற வேண்டும்.

  • நேர்மை (Honesty)

செய்தியாளர் மிகவும் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும். செய்திகள் இல்லாத இடத்தில் பொய்யாகச் செய்தியை உருவாக்குவதோ, கிடைத்த செய்தியைவேண்டுமென்றே வெளியிடாமல் புதைத்து விடுவதோ இதழியல்அறமாகாது.

  • கையூட்டுப் (லஞ்சம்) பெறாமை

செய்தியாளர்கள் கையூட்டுக் கருதியோ, வேறுநன்மைகளையும் சலுகைகளையும் எதிர்பார்த்தோ செய்திகளை மாற்றவோ, திருத்தவோ, பொய்யைப் பரப்பவோ கூடாது. சிலர்புகழ் பெறுவதற்காகவும், விளம்பரம் ஆவதற்காகவும் செய்தியாளர்களைப் பயன்படுத்திக் கொள்ள முயல்வார்கள். அன்பளிப்புகள், விருந்துகள் வழங்கி, செய்தியாளர்களைச் சிலர்விலை கொடுத்து வாங்க முயற்சி செய்வார்கள். செய்தியாளர்கள் இது போன்ற சோதனைகளுக்கு ஆட்படாமல்சாதனைகளைச் செய்வதிலேயே கவனமாக இருக்க வேண்டும்.

  • செயல் திறன்

செய்தியாளர் நுட்பமாகவும் திறமையாகவும் தந்திரமாகவும்செயல் படவேண்டும். சூழ்நிலைக்கு ஏற்பச் செயல்படும்தந்திரத்துடன் பணிகளைச் செய்ய வேண்டும்.

  • ஏற்கும் ஆற்றல்

புதிய இடங்களுக்குச் செல்லும் பொழுதும், புதியமனிதர்களைப் பார்த்துப் பழகும் பொழுதும் அதற்கு ஏற்றாற்போலத் தன்னை மாற்றிக் கொண்டு செயல்பட வேண்டும். புதியனவற்றை ஏற்கும் மனப் பக்குவம் இருக்க வேண்டும்.

  • தன்னம்பிக்கை

செய்தியாளர் தளராத தன்னம்பிக்கையோடு பணிசெய்ய வேண்டும். என்னால் முடியும், செயற்கரியன செய்வேன் என்ற தன்னம்பிக்கை இருந்தால் பலவற்றைஎளிதாகச் செய்யமுடியும்.

  • இனிய ஆளுமை (Personality)

செய்தியாளர் இனிய ஆளுமையை வளர்த்துக் கொள்ளவேண்டும். காண்பவர்களைக் கவரும் வகையில் பொலிவானதோற்றமும், இனிமையாய்ப் பழகும் பண்பும்கொண்டவர்களாகச் செய்தியாளர்கள் இருக்க வேண்டும்.அத்தகையவர்களால் பணிகளை எளிதாகச் செய்ய முடியும்.

  • தெளிவாகக் கூறும் ஆற்றல்

செய்தியாளர் எதனையும் தெளிவாக எடுத்துக் கூறும்ஆற்றல் பெற்றிருக்க வேண்டும். பேசுவதிலும், எழுதுவதிலும்தெளிவு இருக்க வேண்டும். நேரில் பார்த்துச் செய்திகளைச்சேகரிக்கின்ற பொழுது தெளிவாக விவரங்களைக் கேட்டறியவேண்டும். செய்திகளை, குழப்ப மில்லாமல் தெளிவாக எழுதும்ஆற்றல் பெற்றிருக்க வேண்டும்.

  • மரபுகளைப் பற்றிய அறிவு

சமுதாயம், சமயம் தொடர்பான செய்திகளைத் திரட்டித்தரும் பொழுது மரபுகளை அறிந்திருக்கவேண்டும். மரபுகளுக்குமுரண்படும் வகையில் செய்திகளைக் கொடுக்க நேரிட்டால்கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.

  • சட்டத் தெளிவு

எப்படிப்பட்ட செய்திகளை வெளியிட்டால் சட்டப்படிகுற்றம் ஆகிவிடும் என்பதைச் செய்தியாளர் அறிந்திருக்கவேண்டும். சட்டத் தெளிவு இல்லாமல் எதையும்செய்தி ஆக்கினால் அவருக்கும், செய்தித்தாளுக்கும்தொல்லைகள் ஏற்படும். குறிப்பாக, சட்ட மன்ற, நாடாளுமன்றச் செய்திகளை வெளியிடும் பொழுது மிகவும் கவனமாகஇருக்க வேண்டும்.

இவ்வாறு செய்தியாளர் பல தகுதிகளையும் பண்புகளையும் சிறப்பாகப் பெற்றிருக்க வேண்டும்.

News

Read Previous

நீட் தேர்வில் தோல்வி அடையும் மாணவ கண்மணிகள் தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும் : வைகோ வேண்டுகோள்

Read Next

பெண்களுக்கான சிறப்பு பயான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *