கடின உழைப்புடன் படித்தால் அரசுப் பணியில் உயர் நிலையை பெறலாம்
கடின உழைப்புடன் படித்தால் அரசுப் பணியில் உயர் நிலையை பெறலாம்
டெபுடி அக்கவுண்டண்ட் ஜெனரல் காரைக்குடி ஜே. எஸ். முஹம்மது அஷ்ரப் பேச்சு
பரமக்குடி :
கடின உழைப்புடன் படித்தால் அரசுப் பணியில் உயர் நிலையை பெறலாம் என இந்திய அரசின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் அக்கவுண்டண்ட் ஜெனரல் அலுவலகத்தின் டெபுடி அக்கவுண்டண்ட் ஜெனரல் காரைக்குடி ஜே. எஸ். முஹம்மது அஷ்ரப் பேசினார்.
பரமக்குடி கே.ஜே.இ.எம். மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ஜவ்வாதுப் புலவர் அரங்கத்தில் சக்சஸ் அகாடமியின் சார்பில் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தொடக்கமாக சக்சஸ் அகாடமி மாணவிகள் இறைவசனங்களை ஓதினர். கீழ முஸ்லிம் ஜமாஅத் சபை செயலாளர் கமருதீன் தலைமை வகித்தார். கே.ஜே. இ.எம். மேல்நிலைப்பள்ளி தாளாளர் முன்னிலை வகித்தார். ஆசிரியர் கே. ஏ. ஹிதாயத்துல்லா வரவேற்புரை நிகழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்புரை நிகழ்த்திய இந்திய அரசின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் அக்கவுண்டண்ட் ஜெனரல் அலுவலகத்தின் டெபுடி அக்கவுண்டண்ட் ஜெனரல் காரைக்குடி ஜே. எஸ். முஹம்மது அஷ்ரப் பேசியதாவது : கடின உழைப்புடன் படித்தால் அரசுப் பணியில் உயர் நிலையை பெறலாம். மேலும் வாழ்க்கையில் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு கஷ்டப்பட்டு படித்தால் பின்னர் வாழ்வின் அனைத்து நாட்களும் வசந்த காலமாக இருக்கும். குறிப்பாக நம்மைப் போன்ற சூழ்நிலையில் இருந்து உயர் பதவிக்கு வரக்கூடியவர்கள் சிறப்பான முறையில் அரசின் வளர்ச்சிப் பணிகளை சிறப்பாக செய்வர் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. மேலும் லஞ்ச லாவணயம் உள்ளிட்டவை தடுக்கப்படும். எனவே ஐஏஎஸ் தேர்வுக்கு பயிற்சி பெறுவதன் மூலம் 18 தேர்வுகளை எதிர்கொள்ள முடியும். இந்த பயிற்சி அனைவருக்கும் சென்று சேரும் வகையில் காணொலி வழியாக ஏற்பாடு செய்யப்பட இருக்கிறது. இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மை அணி நிர்வாகி எஸ்.எம். இதாயத்துல்லா, தலைமை ஆசிரியர் அஜ்மல் கான், இளையான்குடி ஜாஹிர் உசேன் கல்லூரியின் முன்னாள் முதல்வர் முனைவர் செய்யது உசேன், ஆசிரியர்கள் சிஹாபுதீன், திப்பு சுல்தான், இக்ரா நிறுவனத்தின் ஆமினா முஹம்மத், துணை தாசில்தார் கமருத்தீன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
சக்சஸ் அகாடமியின் இயக்குநர் முதுவை ஹிதாயத் நன்றியுரை நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் ஜமாஅத்தார்கள், மாணவ, மாணவியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.