வெட்டியாள்
*வெட்டியாள்*
தோராயமாகத் தோண்டினாலும்
துள்ளிய அளவாகத்தான் இருக்கும்
அவள் வெட்டப்படும் குழிகள்…
எட்டு கைகள் சுமந்து வரும்
மட்டைப் படகு
உப்புக் கண்ணீரில்
தத்தளிப்பதை உணராமல் இல்லையவள்…
பூக்களை அணிவித்து
பூசை செய்யத் தெரிந்தவள்
அப்புறப் படுத்தலின் வேகத்திற்கு
அநாயசமாக ஒப்புக்கொடுக்கிறாள் தன்னை…
மது உறிஞ்சிய சொந்தங்களின்
வாய்கூட்டும் பேச்சுக்கள்
உயிரோடிருக்கும் இவளின்
நரகத்தின் நடை
திறந்தது போலிருக்கக் கூடும்…
அச்சமும் கேலியும்
அரற்றித் துரத்திடினும்
அதனோடே யொட்ட
அவசியமாக்கியிருக்கிறாள் அவளை..
சிலநேர சிசுக்களின் வரவில்
சித்தரவதை அவளாகிறது…
பல்வேறு நிலைகளில் முடிவென்பது
வலுவான உண்மையாகி பரிதவிக்கிறது…
கருவறை சுமக்கும்
பெண்ணிணத்தின் வழியே
கல்லறைப் பசிக்கும்
உணவிடுகிறாள் ஒருத்தி…
நன்றாகக் கிளறியெடுத்தச் சாம்பலில்
எதுவுமே எழுதியிருக்கவில்லை
சாதி மதம் இனமென்னும் இன்ன பிறவும்…!
#கனகா பாலன்