விதியும் , விருப்பமும்
விதியும் , விருப்பமும்
இறப்பு என்பது புதிதல்ல -அது
பிறப்பவர் யாவர்க்கும் நடக்கும்
இறப்பவருக்கு வருந்தி அழுதல்
இருப்பவர் தமக்கு வழக்கம் .
விதிவிலக்கென்று யாருமில்லை
விதித்தபடி இது நடக்கும் .
ஜாதி, மத, இன, மொழி அந்தஸ்தெல்லாம்
இந்த விதிக்குள் அடக்கம் .
மரணமடைந்தவர் உடலுக்கு இறுதி
மரியாதை செய்வது வழக்கம்.
இறுதியாய் அவர் முகத்தைப்பார்த்து
வாய்க்கரிசி போடுவதும் வழக்கம் .
இடுகாட்டிற்கு எடுத்துச் சென்று
உடலை செய்வார் அடக்கம் .
எரியூட்டுவதும் உண்டு அது
அவரவர் குடும்ப வழக்கம் .
பாழாய்ப்போன கொரோனாவால்
உயிர் பிரிந்தால் என்ன நடக்கும்.
முகம் தெரியாது உடலை மறைத்து
முகமறியாத ஊழியர் சுமந்து
முறைப்படி சடங்கு எதுவுமின்றி
வாய்க்கரிசி போட வழியுமின்றி
எட்ட நின்று ஏங்கித்தவித்து
இரங்கல் தெரிவிக்க உறவுகளின்றி
ஆறுதல் சொல்ல ஆட்களுமின்றி
அனாதைகள் போல் தனித்து நிற்கின்ற
அவலநிலைதானே இருக்கும் – இது
கொடிதினும் கொடிய துக்கம்.
தொற்றிலிருந்து தூர விலகி – பின்
பற்றிடுவோம் பாதுகாப்பு வழிகளை
முறைப்படி வாழ்ந்து , வாழ்க்கை முடிந்தால்
முறைப்படி எல்லாம் நடக்கும்.
அதுவே நமது விருப்பம் .
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்