வாழ்த்துவம் யாமே வாழிய வையகம்!!
வாழ்த்துவம் யாமே
வாழிய வையகம்!!
முகம் தெரியா முகநூல் வரமாக
அகம் குளிர வாழ்த்தும் இதமாக
சுகம் இதுவே முகமென இன்புற
முகம் தெரிவர் முகத்தை தொலைத்தனரோ?
உறவுகள் குறைய உள்ளம் குமுற
சிறகுகள் வெட்டிய பறவைகளாய் போனரோ?
தெரியாத இடத்தில் தெளிக்கும் அன்பு
தெரியும் இடத்தே தேய்ந்தது ஏன்?
வாழ்வே ஒருமுறை வாழும் நிலத்தில்
வாழ்ந்து வாழ வாழ்த்த நெஞ்சம்
மறப்பது ஏன்?
ஒன்றே இனமாய் ஒன்றி வாழ
அன்றே சொன்னான் ஆயிரம் இருந்தும்
நன்றே ஏக நாமும் மறந்து
இன்று படும் இன்னல்கள் ஏன்?
அருகே இல்லா அனைத்தும் புதுமை
அருகில் இருந்தால் அனைத்தும் பழமை
அதனால் கழித்தோம் ஆங்கே பழமை
இதமாய் கழிக்க இந்தோ புதுமை
என்றே ஆனதோ?
வேண்டாம் புதுமை வேண்டுவம் பழமை
வேண்டுவர் கூடி வேண்டிய பகிர்ந்து
வேண்டும் உலகில் வேண்டிவாறு
வேண்டுதல் கிட்ட வேண்டும் இன்றே!
இதயம் இணைந்து இதயம் நனைந்து
இதயம் பேசி இதயம் மகிழ்வோம்!
நிச்சயம் மலரும் உச்சமாய் உறவு
இச்செயல் நம்மை இன்பத்தில் ஆழ்த்தும்
இனியவை கூறி இன்னா தவிர்த்து
நன்றிது உணர்ந்து நின்றிடுவோம் நாம்!!
ஏதோ வந்ததை இங்கே எழுதிட
ஏனோ சொன்னாய் இன்பத் தமிழே
நீயே விளக்கு நித்தம் எவர்க்கும்
நாயேன் அறியேன் நவின்றதன் பொருளை!
தாயே உன்னால் தான்வரம் பெற்றேன்
தமிழே எந்தன் அகத்தே எழுந்து
தினமும் வருவாய் திசைகள் பறப்பாய்
உன்னடி போற்றி உறவுகள் வளர
வாழ்த்துவம் யாமே
வாழிய வையகம்!!
– சுரேஜமீ
மஸ்கட்