மெழுகாய் உருகும் உள்ளம் !

Vinkmag ad

மெழுகாய் உருகும் உள்ளம் !

அருட்கவி அதிரை தாஹா

வாக்கிய கலிமா வளர்த்தே நிறுத்திய

வள்ளல் முஹம்மதர் பேரர்

பாக்கியம் என்றேபகைவரை யொழித்தே

பாதுகாத்திட தீனை

நோக்கிலே இறையின் தயவினைத் தேக்கி

நுழைந்தனர் கர்பலா களமே !

போக்கிலே புதுமை போர்க்களக் கொடுமை

புண்பட உருகுமே உளமே !

 

மக்களின் உரிமை ஒலியினை உலகில்

மங்கா மலர்த்திட வேண்டி

தக்கவர் புலியாம் அலியவர் மகனார்

தாங்கிய வீரத்தை எண்ணின்

மிக்கவர் உடல்பலம் மெலிந்தவ ரெல்லாம்

மெழுகாய் உருகுவ ரம்மா !

சுக்கென உடம்போ சிதறிய தம்மா

சுடர்தலை துண்டித்தா ரம்மா !

வெறிபிடித் தாட்சி வேண்டிய யஸீதின்

வெகுளியோ எரிமலைத் தோற்றம் !

கரிமனப் பகைவர் களத்திடைக் கழுகாய்

கடுமனம் காட்டியே எதிர்த்தார்

நெறியினைக் கடந்த கூஃபா நகர்வழி

நீள்துயர் நடந்தது அம்மா !

அறுத்துத் தலையை அடர்கூர் குச்சியில்

அமைத்தெடுத் தாரே அம்மா !

 

நேர்மை கடந்தார் முன்னர் வாதம்

நிகழ்த்தியும் பயனில்லை, குடிக்கும்

நீர்தனை நிறுத்தி நீள்துயர் தாகம்

நிகழ்த்தினர் குழந்தையும் கதற

போர்முனை அம்பால் கொன்றனர் சிரித்தே

போர்க்களம் நகைத்திட நின்றார் !

பார்த்தோர், கேட்டோர் பதைக்கும் கொடுமை

பாருளம் உருகின மெழுகாய் !

 

இறைநபி, மறைநபி இன்னபி பேரர்

இராப்பகல் பட்டிட்ட துயரம்

மறைந்தில மனத்தில் மறைந்தும் ஆயிரம்

மற்றும் ஐநூ றாண்டே !

கறைபடு சரித்திரம் கண்டவர் யஸீது

காலம் தூற்றும் கோலம் !

நிறைபடும் ஈமான் தாரியின் நெஞ்சில்

நிறைவு பெருகுமே எழிலாய் !

 

புத்தாண்டு நாளில் புண்ணிய தியாகம்

பூத்திடச் செய்வீர் நெஞ்சில்

சித்தம் வைப்பீர் மெழுகென உருகிச்

சிலிர்த்தெழும் சிங்க நடையில்

நித்தம் நிற்பீர் ஈமான் காப்பீர்

நிலைகுலைந் தழிவார் நீசர் !

பற்றி ஒற்றுமை பாரைக் காப்பீர்

பாங்குறவாழ்கவே உசைனார் !

 

( இனிய திசைகள் – அக்டோபர் 2015 )

News

Read Previous

சந்தை

Read Next

வன்முறை தவிர்ப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *