மெழுகாய் உருகும் உள்ளம் !
மெழுகாய் உருகும் உள்ளம் !
அருட்கவி அதிரை தாஹா
வாக்கிய கலிமா வளர்த்தே நிறுத்திய
வள்ளல் முஹம்மதர் பேரர்
பாக்கியம் என்றேபகைவரை யொழித்தே
பாதுகாத்திட தீனை
நோக்கிலே இறையின் தயவினைத் தேக்கி
நுழைந்தனர் கர்பலா களமே !
போக்கிலே புதுமை போர்க்களக் கொடுமை
புண்பட உருகுமே உளமே !
மக்களின் உரிமை ஒலியினை உலகில்
மங்கா மலர்த்திட வேண்டி
தக்கவர் புலியாம் அலியவர் மகனார்
தாங்கிய வீரத்தை எண்ணின்
மிக்கவர் உடல்பலம் மெலிந்தவ ரெல்லாம்
மெழுகாய் உருகுவ ரம்மா !
சுக்கென உடம்போ சிதறிய தம்மா
சுடர்தலை துண்டித்தா ரம்மா !
வெறிபிடித் தாட்சி வேண்டிய யஸீதின்
வெகுளியோ எரிமலைத் தோற்றம் !
கரிமனப் பகைவர் களத்திடைக் கழுகாய்
கடுமனம் காட்டியே எதிர்த்தார்
நெறியினைக் கடந்த கூஃபா நகர்வழி
நீள்துயர் நடந்தது அம்மா !
அறுத்துத் தலையை அடர்கூர் குச்சியில்
அமைத்தெடுத் தாரே அம்மா !
நேர்மை கடந்தார் முன்னர் வாதம்
நிகழ்த்தியும் பயனில்லை, குடிக்கும்
நீர்தனை நிறுத்தி நீள்துயர் தாகம்
நிகழ்த்தினர் குழந்தையும் கதற
போர்முனை அம்பால் கொன்றனர் சிரித்தே
போர்க்களம் நகைத்திட நின்றார் !
பார்த்தோர், கேட்டோர் பதைக்கும் கொடுமை
பாருளம் உருகின மெழுகாய் !
இறைநபி, மறைநபி இன்னபி பேரர்
இராப்பகல் பட்டிட்ட துயரம்
மறைந்தில மனத்தில் மறைந்தும் ஆயிரம்
மற்றும் ஐநூ றாண்டே !
கறைபடு சரித்திரம் கண்டவர் யஸீது
காலம் தூற்றும் கோலம் !
நிறைபடும் ஈமான் தாரியின் நெஞ்சில்
நிறைவு பெருகுமே எழிலாய் !
புத்தாண்டு நாளில் புண்ணிய தியாகம்
பூத்திடச் செய்வீர் நெஞ்சில்
சித்தம் வைப்பீர் மெழுகென உருகிச்
சிலிர்த்தெழும் சிங்க நடையில்
நித்தம் நிற்பீர் ஈமான் காப்பீர்
நிலைகுலைந் தழிவார் நீசர் !
பற்றி ஒற்றுமை பாரைக் காப்பீர்
பாங்குறவாழ்கவே உசைனார் !
( இனிய திசைகள் – அக்டோபர் 2015 )