முதல்வனும் நீயே அன்றோ!
முதல்வனும் நீயே அன்றோ!
கல்வியாம் செல்வம் பெற்று ,
கற்றவன் எனும்பேர் கொண்டாய்!
வல்வினை மாற்றும் மாய
வழியினைப் பிறர்க்குச் சொல்லும்
துல்லிய பொருள் கண்டு,
தூய்மையாய் அருள் விளக்கும்
நல்லறி வூட்டும் உன்னை,
நற்பயன் ஆகப் பெற்றேன்!
சிரித்திடும் மழலைச் செல்வம்,
சீர்பெற உந்தன் சேவை
விரித்திடும் வான எல்லை
வரிக்கவோர் துணையும் நீயே!
பரிந்திடும் அன்பால் போற்றி,
பணித்திடு அவர்தம் வேலை!
தரித்திடும் வருமோர் காலம்,r
தக்கதோர் தலைமை என்றே!
பண்புண்டு, பகிரும் உன்பால்
பாசமுண்டு, துடைக்கும் துன்ப
உண்மையுண்டு, உழைக்கும் மாறா
உரமுண்டு! களையாய் உன்னில்
தண்மதியின், கறைபோல் சோம்பல்
தளையுண்டு! அதனை விட்டால்
கண்மணியே, உன்போல் சுட்டிக்
காட்டிடவே யாருண் டிங்கே!
வீணிது கடத்தும் நேரம்,
விழித்திடு தூக்கம் போதும்!
காண்பது கனவும் அல்ல,
கேட்பது முறையும் அன்று!
நாணின்று அம்பே போல,
நடந்திட விரைந்து செல்க!
மாண்புறு வகையில் பள்ளி
முதல்வனும் நீயே அன்றோ!
– திருமதி சிமோன்