முகநூல்
முகநூல் – கவிதை
முகநூலில் முகம்புதைத்து
அகம்தொலைக்கும் அன்பர்களே
கடந்தோடும் காலமதில்
கணப்பொழுதே கேளுங்களேன்.
அகம்தொலைக்கும் அன்பர்களே
கடந்தோடும் காலமதில்
கணப்பொழுதே கேளுங்களேன்.
நொடிக்குவொரு அஞ்சல்
உடனுக்குடன் பகிர்தல்
உவக்குமாறு கெஞ்சல்
உவப்புகண்டு மகிழ்தல்
எதுமெய்? எதுபொய்?
அறியவேண்டாமா உண்மை?
எதுசரி?. எதுதவறு?
அலசவேண்டாமா நன்மை?
சாதிக்கொரு சங்கமுண்டு
வீதிக்கொரு மன்றமுண்டு
பாதிக்கப்பட்ட மக்களின்
நீதிக்கொரு இடமுண்டா?
நாதியற்ற ஏழைகளின்
வேதனையைப் பகிர்வோமே.
அரசியல் பேசினாலும்
ஆன்மீகம் பேசினாலும்
சீர்கெட்டுப் போகாமல்
நேர்படவே பேசிடுவோம்
சாதீயம் போற்றாமல்
சாதனைகள் பகிர்வோமே.
முகிலென்றால் மழைபொழியும்
முகமென்றால் அன்புமொழியும்
முகநூலில் முகம்புதைத்து
அகமதனைத் தொலைக்காமல்
முகநூலில் அகம்விதைத்து
முகம்மலரச் செய்வோமே.
(குறிப்பு: அகம் = அன்பு )
—
அன்புடன்,
திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.