மழை என்னும் மழலையின் சினம்
மழை என்னும் மழலையின் சினம்
கடற்றாயின் கருவாகி
கருமுகில் சூலில் உருவாகி
இடியின் வலியுடன்
இறங்கிய மழையென்னும் மழலை
மீண்டும் கடற்றாய் மடிதேடி
அலைபாயும் வேளையில்
அதற்கென்று உருவான
அணைகளும், குளங்களும், ஏரிகளுமான
அழகியத் தொட்டில்கள்
அழிக்கப்பட்டதனால்
தூர்வாரல் என்னும்
தூய்மை நடைபெறாததால்
தானிருக்க வேண்டிய இடங்களைத்
தாரை வார்த்துக் கொடுத்த சினத்தினால்
தாரை தாரையாய்க் கண்ணீர் சிந்தியது
போரை விட உக்கிரமாய்த் தண்ணீரால்
போட்டுப் புரட்டி எடுத்தது!
-அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி