மன்னித்துவிடு கண்ணே
மன்னித்துவிடு கண்ணே – கவிதை
முத்தம் பதித்து மகிழ்ந்த கன்னத்தில்
சத்தம் எழும்படி சினங்கொண் டறைந்தது
எத்தனை பெரிய தவறென் றறிந்தேன்
பித்தனை மன்னித் தருள்வாய் கண்ணே.
முருக்க மலர்போல் சிவந்த கன்னத்தில்
கறுப்பு மீதெழ கணத்தில் அறைந்தது
பொறுக்க இயலா பிழையென் றுணர்ந்தேன்
மறந்து மன்னித் தருள்வாய் கண்ணே.
செல்லமே என்றுனைக் கொஞ்சி அழைத்திட்ட
நல்ல நாட்களை நானோ மறப்பேன்?
பொல்லாச் சினத்தால் செய்த தவற்றினை
வல்லே மன்னித் தருள்வாய் கண்ணே.
—
அன்புடன்,
திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
Tags: மன்னித்துவிடு