குழந்தைகளுக்கு சாப்பாட்டுடன் ஸ்மார்ட்போன் எனும் பேராபத்தையும் ஊட்டுகிறோம்!
குழந்தைகளுக்கு சாப்பாட்டுடன் ஸ்மார்ட்போன் எனும் பேராபத்தையும் ஊட்டுகிறோம்!
சில நாட்களுக்கு முன்பு ரயில் பயணத்தில் ஒரு சிறுவனைப் பார்த்தேன். ஒரு எட்டு வயது இருக்கலாம். எனது பால்ய கால ரயில் பயணங்களை ஒப்பிடும்போது அவனது பயணம் பல வகைகளில் வித்தியாசமானது. அவன் ஜன்னல் சீட் கேட்டு அடம்பிடிக்கவில்லை, தின்பண்டங்கள் வாங்கித் தரச் சொல்லி அடம்பிடிக்கவில்லை, துறுதுறுவென இல்லாமல் அமைதியாக இருந்தான், தொணதொணவென அவன் பெற்றோரிடம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை, ஆறு மணி நேரப் பகல் பயணத்தில் கொஞ்சம்கூட உறங்கவில்லை, ஒரு குழந்தை இருக்கும் பெட்டி என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இது எல்லாவற்றுக்கும் காரணம் ஒன்றே ஒன்றுதான்; அவன் கையில் அகலமான ஒரு செல்போன் இருந்தது. அதை விட்டு அவனது கண்கள் அகலவேயில்லை.
ஒரு குழந்தைக்குரிய குதூகலங்கள், சுவாரசியங்கள், சேட்டைகள் எதுவும் இல்லாமல் ஒரு குழந்தை ஒரு கருவியுடன் பல மணி நேரம் இருக்குமென்றால் அந்தக் கருவி மீது நாம் நிச்சயம் அச்சம்கொள்ளத்தான் வேண்டும். குழந்தைத்தன்மையைப் பறித்துக்கொள்ளும் எதுவும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பானதல்ல. இரண்டு வயது குழந்தைக்கே செல்போன் கொடுத்து சாப்பாடு ஊட்டும் பெற்றோர்கள், சாப்பாட்டோடு சேர்த்து ஒரு மிகப் பெரிய ஆபத்தையும் ஊட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
செல்போனிலிருந்து வெளியாகும் ரேடியோ கதிர்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சியைப் பாதிக்கின்றன என்பதைப் பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. குழந்தைகளின் சிந்தனைத்திறன், வளர்ச்சி, பசி, தூக்கம் என அத்தனையும் செல்போனால் பாதிப்படைகின்றன என்பதைப் பல்வேறு பெற்றோரும் அறிந்து வைத்திருக்கிறார்கள். அப்படி இருந்தும் அவர்கள் மீண்டும் மீண்டும் குழந்தைகளின் கைகளில் செல்போனைத் தயக்கமின்றிக் கொடுக்கிறார்கள்.
இதில் பெருமிதம் ஏதுமில்லை அய்யா!