மதுரை பற்றி..

Vinkmag ad

 

மதுரை பற்றி.. கவிஞர் வைரமுத்து (1997)

 

பாண்டியர் குதிரைக் குளம்படியும் – தூள்
        பறக்கும் இளைஞர் சிலம்படியும் – மதி
தோண்டிய புலவர் சொல்லடியும் – இளந்
        தோகைமார்தம் மெல்லடியும்
            மயங்கி ஒலித்த மாமதுரை – இது
            மாலையில் மல்லிகைப் பூமதுரை!

நீண்டு கிடக்கும் வீதிகளும் – வான்
        நிமிர்ந்து முட்டும் கோபுரமும்
ஆண்ட பரம்பரைச் சின்னங்களும் – தமிழ்
        அழுந்தப் பதிந்த சுவடுகளும்
            காணக் கிடைக்கும் பழமதுரை – தன்
            கட்டுக் கோப்பால் இளமதுரை!

மல்லிகை மௌவல் அரவிந்தம் – வாய்
        மலரும் கழுநீர் சுரபுன்னை
குல்லை வகுளம் குருக்கத்தி – இவை
        கொள்ளை அடித்த வையைநதி
            நாளும் ஓடிய நதிமதுரை – நீர்
            நாட்டிய மாடிய பதிமதுரை

தென்னவன் நீதி பிழைத்ததனால்
        தெரிந்து மரணம் அழைத்ததனால்
கண்ணகி திருகி எறிந்ததனால் – அவள்
        கந்தக முலையில் எரிந்ததனால்
            நீதிக் கஞ்சிய தொன்மதுரை – இன்று
            ஜாதிக் கஞ்சும் தென்மதுரை!

தமிழைக் குடித்த கடலோடு – நான்
        தழுவேன் என்றே சபதமிட்டே
அமிழ்தம் பரப்பும் வையைநதி – நீர்
        ஆழி கலப்பது தவிர்ப்பதனால்
            மானம் எழுதிய மாமதுரை – இது
            மரபுகள் மாறா வேல்மதுரை!

மதுரை தாமரைப் பூவென்றும் – அதன்
        மலர்ந்த இதழே தெருவென்றும்
இதழில் ஒட்டிய தாதுக்கள் – அவை
        எம்குடி மக்கள் திரளென்றும் – பரி
            பாடல் பாடிய பால்மதுரை – வட
            மதுரா புரியினும் மேல்மதுரை!

மீசை வளர்த்த பாண்டியரும் – பின்
        களப்பிரர் பல்லவர் சோழர்களும் – மண்
ஆசை வளர்த்த அந்நியரும் – அந்த
        அந்நிய ரில்சில கண்ணியரும்
            ஆட்சி புரிந்த தென்மதுரை – மீ
            னாட்சியி னால்இது பெண்மதுரை!

மண்ணைத் திருட வந்தவரைத் – தம்
        வயிற்றுப் பசிக்கு வந்தவரை – செம்
பொன்னைத் திருட வந்தவரை – ஊர்
        பொசுக்கிப் போக வந்தவரைத் – தன்
            சேயாய் மாற்றிய தாய்மதுரை – அவர்
            தாயாய் வணங்கிய தூய்மதுரை!

அரபு நாட்டுச் சுண்ணாம்பில் – கரும்பு
        அரைத்துப் பிழிந்த சாறூற்றி
மரபுக் கவிதை படைத்தல்போல் – ஒரு
        மண்டபம் திருமலை கட்டியதால்
            கண்கள் மயங்கும் கலைமதுரை – இது
            கவிதைத் தமிழின் தலைமதுரை!

வையைக் கரையின் சோலைகளும் – அங்கு
        வரிக்குயில் பாடிய பாடல்களும்
மெய்யைச் சொல்லிய புலவர்களும் – தம்
        மேனி கறுத்த மறவர்களும்
            மிச்ச மிருக்கும் தொன்மதுரை – தமிழ்
            மெச்சி முடிக்கும் தென்மதுரை!

போட்டி வளர்க்கும் மன்றங்களும் – எழும்
        பூசை மணிகளின் ஓசைகளும் – இசை
நீட்டி முழங்கும் பேச்சொலியும் – நெஞ்சை
        நிறுத்திப் போகும் வளையொலியும்
            தொடர்ந்து கேட்கும் எழில்மதுரை – கண்
            தூங்கா திருக்கும் தொழில்மதுரை!

ஆலைகள் தொழில்கள் புதுக்காமல் – வெறும்
        அரசியல் திரைப்படம் பெருக்கியதில்
வேலைகள் இல்லாத் திருக்கூட்டம் – தினம்
        வெட்டிப் பேச்சு வளர்ப்பதனால்
            பட்டாக் கத்திகள் சூழ்மதுரை – இன்று
            பட்டப் பகலில் பாழ்மதுரை!

நெஞ்சு வறண்டு போனதனால் – வையை
        நேர்கோ டாக ஆனதனால்
பஞ்சம் பிழைக்க வந்தோர்கள் – நதியைப்
        பட்டாப் போட்டுக் கொண்டதனால்
            முகத்தை இழந்த முதுமதுரை – பழைய
            மூச்சில் வாழும் பதிமதுரை!

News

Read Previous

லோக்பாலா? “வீக்பாலா?”

Read Next

துபாயில் அமீரக காயிதெமில்லத் பேரவையின் செயற்குழு கூட்டம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *