பழைய ஞாபகம்
“பழைய ஞாபகம்
வெள்ளைப் பூக்களோடு
வளர்ந்துநின்ற தும்பைச்செடிகள்
அகற்றப்பட்டு விட்டன
வீடுகட்டத் தயாராகிவிட்டது
சிலவருடங்களுக்கு முன்
வாங்கிப்போட்ட இடம்
சமையலறை அமைப்புக்கு
என்ஜினியருக்கு யோசனைகள்
சொல்லி மகிழும் அம்மா
பட்ஜெட் கவலைகளும்
கையில் கால்குலேட்டருமாய் அப்பா
அஸ்திவாரத்திற்கு
மண்சுமக்கும் பெண்கள்
நூல்பிடித்து
அளவுகள் சரிசெய்யும் மேஸ்திரி
லாரியிலிருந்து
செங்கல் இறக்கிக்கொண்டிருக்கும் ஆண்கள்
எல்லோரும் இருந்தும்
யாரும் சொல்லவில்லை
இனி அவை தேடுவது
இங்கு கிடைக்காதென்பதை
தேன் குடித்த பழைய ஞாபகத்தில்
சுற்றிச்சுற்றிப் பறந்துகொண்டிருந்த
பட்டாம்பூச்சிகளுக்கு.”
– கவிஞர் செல்வநாயகி கவிதைகள்