‘’எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல்’’..

Vinkmag ad

‘’எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல்’’..
…………………………..

நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும், உதவி தேவைப்படுபவர்களுக்கும் உதவ வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது..பிறருக்காக இரக்கப்படும் சுபாவம், மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை, நமக்கு இருக்க வேண்டும்..

பிறரின் கனவுகளை அடைய நாம் உதவினால், நம் இலக்கை நாம் எளிதாக அடைந்து விட முடியும்

நம்மால் பிறருக்கு புது வாழ்க்கை அமையலாம், செல்வம் சேரலாம், தைரியம் தரலாம்,புது நம்பிக்கை அளிக்கலாம். இவையெல்லாம் இரக்கத்தின் மூலமாகத்தான் சாத்தியமாகும்.

எந்தவித எதிர்பார்ப்பு இல்லாமல் உதவி செய்வது சிலரின் குணமாகவே கூட இருக்கும்., அப்படிப்பட்ட, வணக்கத்துக்கு உரிய மனிதர்கள் நம்மை சுற்றி இருக்கத்தான் செய்கிறார்கள்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரம். அது ஒரு மருத்துவ மனையின் சிறப்பு வார்டு. உள்ளே இருந்த படுக்கையில் முதியவர் ஒருவர் படுத்திருந்தார்.

அவருக்கு வந்து இருந்தது உயிரைக் கொல்லும் ஒருவகை புற்று நோய். இன்னும் ஓரிரு நாள்கள்கூட அவர் தாங்க மாட்டார் என்று மருத்துவர் பேசிக் கொண்டு இருந்தார்கள்.

அன்று மாலை நேரத்தில், அந்த முதியவரின் வார்டுக்கு, அவரை கவனித்து கொள்ளும் நர்ஸ் வந்தார்.

`சார்… உங்களைப் பார்க்க உங்க மகன் வந்து இருக்கார்.’’
கிழவர் கண்ணைத் திறந்து பார்த்தார். நீர்த் திரையிட்ட கண்களால், எதிரே மங்கலாக நர்ஸுக்கு அருகே ஓர் உருவம் இருந்ததைப் பார்த்தார்.

அவருக்கு எதிரே 20 வயதுக்குள் இருக்கும் ஓர் இளைஞன் நின்று கொண்டு இருந்தான்.சீருடை அணிந்து இருந்தான்.

அவன் அணிந்து இருந்த சீருடை ‘யூத்மரைன்’ (Youth Marine) என்கிற, அமெரிக்க அரசு நடத்தும் இளைஞர்களுக்கான ஒரு திட்டத்துக்கானது.

படுக்கையில் இருந்த முதியவர், நர்ஸிடம் தன் மகன் `யூத் மரைன்’ புரோக்ராமில் இருக்கிறான் என்று ஏற்கனவே சொல்லிஇருந்தார்.

அதனால்தான், நர்ஸ் அவனைச் சரியாகக் கண்டுபிடித்து அவர் முன்னே நிறுத்தி இருந்தாள்.
இளைஞன் படுக்கைக்கு அருகே போய் நின்றான். அவர், தன் கைகளால் அவன் கைகளைப் பிடிக்கத் துழாவினார்.

அதைப் பார்த்ததும் இளைஞன் தன் கையை அவர் கைக்கு அருகே நீட்டினான். நடுங்கும் தன் கரங்களால் முதியவர் பாசத்தோடும் வாஞ்சையோடும் அவன் கைகளைப் பற்றி கொண்டார்.

ஒரு நாற்காலியைக் கொண்டுவந்து, முதியவரின் படுக்கைக்கு அருகே நர்ஸ் போட்டார். இளைஞன் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டான். அன்று இரவு முழுக்க அவர், அவனுடையக் கைகளைப் பிடித்தபடியே இருந்தார்.

அவ்வப்போது அந்த நர்ஸ், அவர் உடல்நிலை எப்படியிருக்கிறது என்று பார்ப்பதற்காக உள்ளே வருவார்.

இளைஞன், முதியவரின் கைகளைப் பற்றியபடி இருப்பான். ஒருமுறை பொறுக்க முடியாமல் நர்ஸ் சொன்னார்…

`தம்பி… நீங்க வேணும்னா கொஞ்ச நேரம் வெளியே போய் கொஞ்சம் ஓய்வு எடுங்க, எவ்வளவு நேரம்தான் இப்படியே உட்கார்ந்து இருப்பீங்க?’’

வேண்டாம். பரவாயில்லை’’ என்று சொல்லி விட்டான் அந்த இளைஞன். நர்ஸின் வற்புறுத்தலால் ஒரே ஒரு கப் காபி மட்டும் கேட்டு வாங்கிப் பருகினான்.

அடுத்த நாள் அதிகாலையில் நர்ஸ் வந்தபோது அந்த இளைஞன் சில நல்ல வார்த்தைகளை, முதியவரின் காதில் சொல்வதைக் கண்டாள். ஆனாலும் அவர் கண் திறக்க வில்லை. அவர் கைகள் மட்டும், இளைஞனின் கையை இறுகப் பற்றி இருந்தது.

விடிந்தது. கிழவர் இறந்து போய் இருந்தார். இளைஞன், அவருடைய தளர்ந்த கையைத் தன் கையிலிருந்து வெகு ஜாக்கிரதையாக விடுவித்து, மெள்ள படுக்கையில் வைத்தான்.

வெளியே வந்தான். நர்ஸிடம் செய்தியை சொன்னான்.
`ரொம்ப சாரி தம்பி… உங்க அப்பாவின் மரணத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்… என்றார் அந்த நர்ஸ்.

நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க. அவர் என் அப்பா இல்லை. இதுக்கு முன்னாடி நான் அவரைப் பார்த்தது கூட இல்லை.’’

அவர் உங்க அப்பா இல்லைன்னா, நான் அவர் கிட்ட உங்களைக் கூட்டிட்டு வந்தப்பவே சொல்லி இருக்கலாமே.. ஏன் சொல்லலை?’

நீங்க அவர்கிட்ட என்னைக் கொண்டு வந்து நிறுத்தினப்பவே தப்பா என்னைக் கூட்டிட்டு வந்துட்டீங்கனு தெரிஞ்சுடுச்சு. நீங்க ரொம்ப அவசரத்துல இருந்தீங்க.

அதோட அந்தப் பெரியவரைப் பார்த்ததும், அவர் தன் மகனுக்காக ஏங்குறார்ங்கிறதும்,அவன் இப்போ இல்லைன்னும் புரிஞ்சுது.

அதோட அவர் என் கையைப் பிடிச்சதும், அவரால் நான்தான் அவரோட மகனா, இல்லையான்னு சொல்ல முடியாத அளவுக்கு நோய் வாய்ப்பட்டு இருக்கார்னு புரிஞ்சுது.

அவரோட அந்தக் கடைசி நேரத்தில் அவருக்கு எந்த அளவுக்கு அவரோட மகனின் அருகாமை தேவைப்படுதுனு புரிஞ்சுது.அதான் அப்படியே உட்கார்ந்து விட்டேன்.’’

நர்ஸ் பதில் பேச முடியாமல் பார்த்துக் கொண்டு இருக்க, அந்த இளைஞன் மெல்ல நடந்து வெளியே போனான்.,

ஆம்.,நண்பர்களே..

வாழ்வில் ஒரு நோக்கம் இருக்க வேண்டும். ஒரு குறிக்கோளை நோக்கி நம் வாழ்க்கைப் பயணம் செல்ல வேண்டும்.

வாழ்வில் நமக்கு எதிர்பார்ப்புகள் இருக்க வேண்டும் அந்த எதிர்பார்ப்புகளை நாமே உருவாக்க வேண்டும்.

அடுத்தவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அவர்களுக்கு உதவி செய்யுங்கள்

நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அடுத்தவர்களுக்கு உதவுங்கள்…….(ஆக்கம்.உடுமலை சு.தண்டபாணி)…

News

Read Previous

பழைய ஞாபகம்

Read Next

ஏ.ஆா்.தாஹாவின் சிந்தனை அரும்புகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *