நூலகம் நாடு-நான் அதன் மன்னன்!!
நூலகம் நாடு-நான் அதன் மன்னன்!!
-எசேக்கியல்காளியப்பன்-
மச்சுதான் நாடு! மற்றிப்,
புத்தகம் மக்கள்! அன்னார்
குச்சுதான் பெட்டி; கொண்ட,
சொற்களே பேச்சு! வேறு என்
இச்சைதான் சட்டம்; எந்தன்,
எழுத்துதான் திட்டம், திட்டத்
தச்சனும் நானே! ஆட்சித்
தலைவனும் நானே! காண்பாய்!
புலவரே முன்னோர்; காணும்
புலமையே மொழியாம்! தோன்றும்
கலவரம் இல்லை; எந்தக்
கருத்துமே என்முன்; எல்லாம்
பலவிதம் பேசும் பக்கம்
பகருவார் உண்டு! பாதை
விலகுவார் உண்டு! ஆனால்
விலங்கினார் இல்லை;இல்லை;
பலவிதச் சோலை ; பாடல்
ஒழுக்குநீ ரோடை! பாடும்
கலைகளே பண்கள் ; காலம்
கடந்தவை இல்லை! என்றும்
நிலைப்பவை நெஞ்சுள்; நீங்கா
நினைவுகள் செல்வம்! நிற்கும்
மலைகளோ எண்ணம்; சொல்லின்
மகிழ்வுதான் இன்பம் கண்டாய்!
இறக்குவ துண்டாம்! ஏற்று
மதிகளும் உண்டே! நல்ல
மறப்பொருள், காதல், விஞ்ஞா
னத்துடன் மறைகள் உள்ளச்
சிறப்பு,அதன் செயல்கள், ஞானம்
செறிந்த,சித் தந்தம் கற்றே
நிரப்புதல் செய்தொ ழில்கள் ;
நிகழ்வரு மானம் இன்பம்!
பயிரிடல் விரித்து ரைப்பார்!
பாவுநூல் நெசவு சொல்வார்;
உயர்மனை அறிவு சேர்ப்பார்!
உயிர்க்கலை நுணுக்கம் தேர்வார்!
செயல்படும் சிந்த னைக்குச்
சேர்ந்திட அச்சில் வார்ப்பார்!
துயரிலாது இவர்கள் கூடத்
தோற்றிடா ஏற்றத் தாழ்வே!
கருத்திலே உயர்வு; காணும்
கண்ணிலே தெளிவு;நெஞ்சை
உறுத்துதல் இல்லை; உள்ளத்து
உணர்விலே வெண்மை! எல்லாம்
நிறுத்தவோர் அறிவு! நெஞ்சுள்
நிலைக்குமோர் ஏற்றம்; என்ற
மறுத்தொடாக் கொள்கை மக்கள்!
மற்றியான் அவர்கள் மன்னன் !
–௦–