நீங்கவந்து பிறந்திடுங்க !

Vinkmag ad

நீங்கவந்து பிறந்திடுங்க !
( எம். ஜெயராமசர்மா … மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா )

ஏவுகணை தந்தவரே
இரக்ககுணம் மிக்கவரே
இந்தியாவின் புகழ்தன்னை
இமயமெனச் செய்தவரே

ஓய்வொழிச்சல் இல்லாமல்
உண்மையாய் உழைத்தவரே
உயர்ச்சிபெறும் மந்திரத்தை
உலகினுக்கே உரைத்தவரே

உயர்ச்சிபெற்ற போதெல்லாம்
உணர்விழக்கா நின்றவரே
அயர்ச்சியெனும் சொல்தன்னை
அதிர்ச்சியுடன் பார்த்தவரே

தளர்ச்சியுறும் மனத்தையெல்லாம்
தானெழுப்பி நின்றவரே
முயற்சிதனை முதலாக்கி
முன்வந்து நின்றவரே

இல்லறத்தை துறந்தாலும்
நல்லறத்தை துறவாமல்
வள்ளுவரின் குறள்வழியே
வாழ்ந்துநின்ற மாமணியே

சொந்தபந்தம் பாராமல்
சுகதுக்கம் நோக்காமல்
சொந்தமண்ணின் சுகத்துக்காய்
தூங்காமல் உழைத்தவரே

செந்தமிழை நேசித்த
சிறந்த விஞ்ஞானியையா
நந்தமிழில் கல்விகற்று
நாடுபோற்ற நின்றாயே

பட்டம்பல வந்தாலும்
பதவிக்காய் அலையாமல்
திட்டமிட்டு இந்தியாவை
திரும்பிப்பார்க்கச் செய்தவரே

பணத்துக்காய் அலைந்துநிற்கும்
பாதகரின் மத்தியிலே
குணத்தாலே இடம்பிடுத்து
குவலயத்தில் உயர்ந்தவரே

காந்தி வந்தபின்னாலே
காமராசர் வந்துநின்றார்
கலாமையா போனதனால்
கண்ணியத்தை தேடுகிறோம்

ஏழ்மையிலே பிறந்ததனால்
எளிமைதனை ஏந்திநின்றார்
எல்லோரின் மனங்களிலும்
இங்கிதமாய் அமர்ந்துவிட்டார்

சிந்தனையில் உயர்ந்தாலும்
சிறுவர்தமை நேசித்தார்
வந்துநிற்கும் கூட்டமெல்லாம்
வழியவர்க்கு உரைத்துநின்றார்

விஞ்ஞானி மெஞ்ஞானி
மேலான அவதானி
கண்ணாலே பார்த்துவிடின்
கருத்தாகப் பதித்திடுவார்

என்னாளும் புன்சிரிப்பை
இதழோரம் கொண்டுநிற்பார்
எங்கள் கலாமையாவை
இந்தியாவின் சொத்தென்போம்

அமெரிக்க தேசமதில்
அரைக்கம்பம் கொடிபறக்க
அப்துல்கலாம் உயர்வடைந்து
அனைவரையும் அணைத்துவிட்டார்

இதழோரம் முடிபுரள
இமைதன்னில் நரைதெரிய
எங்கள் கலாமையாவை
எப்போது நாம்காண்போம்

கலாமையா உங்களுக்கு
கனமான சலாமுங்க
நிலவுலகில் மறுபடியும்
நீங்கவந்து பிறந்திடுங்க

தலைவரெலாம் வந்தாலும்
தானாட்சி செய்தாலும்
நிலையான தலைவரென
நீங்களன்றோ நிற்கின்றீர்

அரசியலில் இல்லாமல்
ஆட்சியிலே அமர்ந்தீர்கள்
அப்துல்கலாம் அய்யாநீர்
அண்டவனின் அன்பளிப்பே !

News

Read Previous

டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம்

Read Next

வாட்ஸ் ஆப் அறிமுகப்படுத்தியிருக்கும் 3 புதிய வசதிகள் – ஆக்டிவேட் செய்யும் வழிமுறை!

Leave a Reply

Your email address will not be published.