தேனீக்களைக் குறிவைக்கும் துப்பாக்கிகள்
தேனீக்களைக் குறிவைக்கும்
துப்பாக்கிகள்
“””””””””'”””””””””””””””””””””””””'”””””””””””””‘””””””””
பனியைக் காட்டி
பணியவைக்க நினைக்கிறீர்
குளிரைக் காட்டி
நடுங்கவைக்க நினைக்கிறீர்
தடுப்புகளை வைத்து
திருப்பிவிட நினைக்கிறீர்
பள்ளங்கள் பறித்து
அதில்
மூடிவிட நினைக்கிறீர்
பேச்சு வார்த்தைக்கு
அழைத்து
மௌனம் காக்கிறீர்
உழுவனின் வலியும்
நேசமும் தெரியுமா
உங்களின் சேனைகளுக்கு
தனியே விட்டு வந்ததால்
நிலமும் பயிரும்
அவர்களின்றி ஏங்கிக்கொண்டிருக்கும்
மனிதர்களையே
உணர மறுக்கும் உங்களுக்கு பயிர்களையும் மண்ணையும்பற்றி
உணர நேரமேது
எசமானர்களைக் காணாத
ஆடு மாடுகள் இரையெடுத்ததோ
ஆடு மாடுகளை எதுவும்
இரையாக எடுத்ததோ
யார் கண்டார்
மனிதவதை செய்யும் உங்களுக்கு
மிருகங்களின் துன்பம்
தெரிய நியாயமில்லை
பனியிலும் குளிரிலும்
எரியும் வயிறுகளில்
வெந்துகொண்டிருக்கலாம்
உங்களின் அதிகாரங்கள்
மழை புயல் பனி பஞ்சம்
அவர்களைச் சாய்த்துப்போடுகிறது
நிமிரும் தருணங்களில்
உங்கள் அதிகாரம்
நொறுக்கப் போடுகிறது
லத்திக் கம்புகளுக்கும்
உணவு கொடுத்தவன்
செத்துக்கொண்டிருக்கிறான்
நீங்கள் பிடில் வாசிக்கிறீர்கள்
யாருக்கோ வளைந்த
செங்கோல்
உழவர்களின்
விலா எலும்புகளை
நொறுக்கப் பார்க்கிறது
முதலைகளுக்காக
தேனீக்களைக் குறிவைக்கும்
துப்பாக்கியாய்
உழவர் கூட்டத்தை
மிரட்டுகின்றன
உங்கள் சட்டங்கள்
சட்டத்தை மாற்றாவிட்டால்
உங்களை மாற்ற
சாரைசாரையாய்
படையெடுக்கின்றது
உழவுப்படை
உங்களின்
ஆணவம் பெரிது
அதிகாரம் பெரிது
ராணுவம் பெரிது
ராஜாங்கம் பெரிது
மௌனம் பெரிது
அதினினும் பெரிது
உரிமைகள் பிடுங்கப்பட்டவர்களின்
கடுங்கோபம்
— ஆலங்குடி வெள்ளைச்சாமி