தேதி குறிக்கப்பட்டவர்கள்

Vinkmag ad

 

தென்றல் கமால்

 

சிரிப்பைத் தொலைத்து

சிலகாலம் ஆனது

 

அவ்வப்போது அழுவதென்பது

வாடிக்கையாய்ப் போனது

 

ஏன் என நீங்கள் புருவம்

உயர்த்துவது புரிகிறது

 

கூடவே இருந்தவன்

குழிக்குப் போன பின்

 

சிரிப்பைத் தொலைத்து

சிலகாலம் ஆனது

 

அவ்வப்போது அழுவதென்பது

வாடிக்கையாய்ப் போனது

 

அவனுக்கு “புற்று“ என்றார்கள் எனக்கு

உலகின் மீதிருந்த “பற்று” போனது

 

மரணத்தைச் சுமந்து கொண்டு

மனிதனால் எப்படி சிரிக்க முடிகிறது !

 

மரணம் சுமக்கும் பிணமா மனிதர்கள் !

 

கேள்விகள் தினம் தினம் என்னுள்

வேள்விகள் செய்கின்றன

 

நேரமோ கரைந்து கொண்டிருக்கிறது மரணமோ

மனிதனை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது

 

நாட்காட்டியில் தாள் ஒன்றைக் கிழிக்கையில்

வாழ்வின் நாள் ஒன்றையல்லவா கிழிக்கிறோம்.

 

ஒரு நாள் ஒவ்வொரு மனிதனுக்கு

விடியாமலே போகப் போகிறது

 

ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தைச்

சுவைத்தே தீர வேண்டும்

 

மரண வேதனை நிச்சயமானதொன்று

 

இறைவரிகள் வலிகளாய் என்னுள்

நினைவலைகளைச் செய்கின்றன

 

அகமும் புறமும் அழுக்குகளை சுமக்கும்

உடலுடைய மனிதனுக்குத் தான்

உலகின் மீது எத்தனை ஆசை

ஆணவம் பெருமை பொறாமை பேராசை !

 

மரணத்தைச் சுமந்து கொண்டு

மனிதனால் எப்படி சிரிக்க முடிகிறது

 

ஞானம் கிடைத்து விட்டால் இந்த

ஞாலத்தை வெறுத்திடுவோமே

 

கேள்விகள் தினம் தினம் என்னுள்

வேள்விகள் செய்கின்றன

 

சிரிப்பைத் தொலைத்து

சிலகாலம் ஆனது

 

அவ்வப்போது அழுவதென்பது

வாடிக்கையாய்ப் போனது

 

– தென்றல் கமால் –

News

Read Previous

அனாடமிக் செவிவழித் தொடு சிகிச்சை

Read Next

சேமிக்காதது பறவை மட்டுமல்ல; நானும் தான் !

Leave a Reply

Your email address will not be published.