தாயுள்ளம்

Vinkmag ad
(பி. எம். கமால், கடையநல்லூர்)
முதியோர் இல்லத்தில்
புதியதோர் அங்கம் நான் !
அகவை இப்போது
அறுபத்து எட்டெனக்கு !
ஆண்பிள்ளை மூன்றும்
பெண்பிள்ளை ஒன்றும்
ஆசையாய்ப் பெற்ற
அபாக்கிய வாதிநான் !
ஆளுக்கு ஒருமாதம்
அடைக்கலம் தந்த
ஆண்மக்கள் கைசலித்து
அனுப்பிவிட் டார்கள் என்னை !
தாயென்று தானிருந்தேன்
தங்க மகன்களுக்கு
தாலி கட்டியதும்
பேயென்று ஆகிவிட்டேன் !
என்மகன்கள் மூவருமே
எப்போதும் நல்லவர்கள் !
கொடுமைக் காரன் என்றால்
கொன்றிருப்பான் அல்லவா ?
பிள்ளைகள் எனக்குப்
பெரும்பாரம் ஆகவில்லை !
நான்தான் அவர்களுக்கு
நரகமாய் ஆகிவிட்டேன் !
இதயத்தில் தூளிகட்டி
இன்னும் அவர்களுக்கு
தள்ளாத வயதிலும்
தாலாட்டுப் பாடுகின்றேன் !
என்பிள்ளை அவர்களை
ஏசாதீர் ; நாளைக்கு
தன்பிள்ளை களால் இங்கு
தவறிவரக் கூடாது !
போவென்று என்னைப்
புறந்தள்ளி விட்டாலும்
உள்ளத்தில் என்றும்நான்
உட்கார வைத்திருப்பேன் !
நான்பெற்ற பிள்ளைகள்
நலமோடு இருக்கட்டும் !
நான்பெற்ற தொல்லைகள்
நாடாமல் வாழட்டும் !

 

__._,_.___

News

Read Previous

சர்க்கரை நோய்

Read Next

அகரமுதல இணைய இதழ் தொடக்கம்

Leave a Reply

Your email address will not be published.