தந்தையர் தின வாழ்த்துக்கள்
தந்தைக்கு ஒரு சிந்து.
தனக்குள் இருந்த என்னைத்
தாய் வழியாக இந்தத்
தரணிக்குள் கொண்டுவந்த தந்தையே – உந்தன்
தாள் பணியும் எந்தன் சிந்தையே !
மண்ணுலகில் நானந்த
விண்ணளவு உயர்ந்திடவே
எண்ணம் நிறைந்த என் தந்தையே -உம்மை
என்றும் மறவாது என் சிந்தையே.
தான்பட்ட துன்பங்கள்
நான்படக்கூடாதென்ற
மேம்பட்ட எண்ணம் கொண்ட தந்தையே – உந்தன்
மேன்மை மறவாது என் சிந்தையே .
கற்றுத் தெரிந்துலகில்
உற்ற உயர்வடைய
சற்றும் தளராதுழைத்த தந்தையே – உம்மை
சற்றும் மறவாது என் சிந்தையே .
இறைவன் அளித்த பெரு
வரமாக வந்த உம்மை
கரங்கூப்பி வணங்கிடுவேன் தந்தையே – எந்தன்
சிரந்தாழ்த்தி வணங்கிடுமென் சிந்தையே.
அன்புடன்,
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம் .
17.06.2018
Tags: தந்தை