ஜல்லிக்கட்டுக் காளையின் அறைகூவல்!
ஜல்லிக்கட்டுக் காளையின் அறைகூவல்!
===============================
புத்தகக்கட்டில் முகம் புதைத்த மாணவர்களே!
ஜல்லிக்கட்டில் காளையெங்கள் துயர்துடைக்க வாருங்கள்…
கட்டிடப் பரப்பில் வாசம்செய்யும் கட்டான வாலிபர்களே…
வயற்பரப்பில் வந்திறங்குங்கள், உரிமைகுரல்கொடுக்க!
படித்துவிட்டு வேலையில்லையென்று சொல்லாதீர்கள்!
படிக்காது உழைக்கும்நாங்கள் போராடவேலைதருகிறோம்
இரைப்பைநிரப்ப இரத்தம்சிந்துமெங்க ளுழைப்பிற்காக…
இனமான எழுச்சிபொங்கப் போராடவாருங்கள்!
உங்களுக்காக ஏருழுதோம், வண்டியிழுத்தோம், செக்கிழுத்தோம்
எங்களுக்காக அரசியலை இழுக்காதீர்கள், எழுச்சிகொள்வீர்!
எங்களுழைப்பால் உங்களுலை கொதிக்கும்போது…
எங்களுக்கோர்ரிழுக்கென்றால் உங்களிரத்தம் கொதிக்கவேண்டுமே?..
முகம்மூடியிருந்த களைப்பை மறைத்துவிட்டு…
சமூகம் விழிப்பைப்பெற ஓசையெழுப்பிக் குரல்கொடு!
தடுமாற்றமில்லா அமைதிப்போராட்டத்தால்…
வெற்றியேற்றம்பெற வெகுநாளில்லை மகனே!
வாடிவாசலுக்கு வந்துபாரெங்கள் வேகத்தை…
போராடிவாடிய உங்கள்முகம்கூட பிரகாசிக்கும்!
ஈராண்டாய் தினவெடுத்த திமிலெல்லாம்…
ஒருநொடியில் கரைய ஓருபாயம் சொல்வேன்!
இப்போதுமொன்றும் காலம் கடந்துவிடவில்லை, நண்பா!
கட்டவிழ்த்துவிடு தடைகளைமுட்டி வேரொடுசாய்க்கிறோம்
உளிகொண்டு செதுக்குமுன் இன்றயபோராட்டம்…நிச்சயம்
ஏறுதழுவுதலென்ற சிலையொன்றை நாளைவடிவமைக்கும்!
http://eluthu.com/kavithai/315455.html
அன்புடன்
பெருவை பார்த்தசாரதி