சுதந்திர தின வாழ்த்து
சுதந்திர தின வாழ்த்து
எழுபத்தி நாலாவது வயதில் அடியெடுத்து வைக்கும்
என்னருமை பாரதத்தாயே , வணங்குகிறேன் , வாழ்த்துகிறேன் .
முழுவதும் சுதந்திரத்தை அனுபவிக்க முனைந்தாலும்
முட்டுக்கட்டைகள் பல முனைந்து தடுக்கிறதே .
வளர்ச்சியின் பாதையில் விரைந்து செல்ல நினை க்கையில்
தளர்ச்சியடையச் செய்யும் கொரோனாவுக்கடிமையானோம் .
கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் கயவர்கள்
கலகம் விளைவிக்கும் சூழ்நிலைக்கடிமையா னோம்.
மத சுதந்திரம் என்ற பெயரில் ஒரு சாரார் மக்களை
மதமாற்றம் செய்யும் இழிசெயலுக்கடிமையானோம் .
அரசியல் சுதந்திரம் என்ற பெயரில் , கட்சிகளின்
அக்கிரமங்களுக்கும் , அராஜகத்திற்கும் அடிமையானோம் .
சம உரிமைப்போராட்டம் என்ற பெயரில் , சனாதன
சமயநெறிகளைக் குலைக்கும் சதிகளுக்கடிமையானோம் .
சாதிகளை ஒழிப்போம் என்று கூறிக்கொண்டே ஒவ்வொரு
சாதிக்கும் சலுகை கேட்கும் சதிச்செயலுக்கடிமையானோம் .
அமைச்சர் முதல் அடிமட்ட ஊழியர்வரை பரவியுள்ள
நமைச்சல் கொடுக்கும் லஞ்ச ஊழலுக்கடிமையா னோம்.
ஊடகச் சுதந்திரம் என்ற பெயரில் ஊடுருவி
கேடுகள் பரப்பும் கீழ்மைக் கடிமையானோம்.
நீதிதேடிப் போனால் , நெடுங்காலம் இழுத்தடிக்கும்
நீதித்துறையின் நெறிமுறைகளுக்கடிமையானோம் .
தொழில்துவங்க முனைவோர்க்குத் தொல்லைகள் பலதந்து
வழிப்பறியாளர்போல் நடக்கும் கயவர்களுக்கடிமையானோம் .
இந்தத் திட்டமென்றாலும் எதிர்த்துக் குரல்கொடுத்து
அந்தத்திட்டத்தை ஒழிக்கும் அறிவிலிகளுக்கடிமையா னோம்.
வருமானத்திற்காக அரசாங்கமே நடத்தும் விற்பனையால்
அவமானம் தருகின்ற மதுவிற்கடிமையானோம்.
சுதந்திரமாய்த் தேவையான கல்விகற்க உரிமையின்றி
தந்திரமாய்த் தடுக்கும் தலைவர்களுக்கடிமையானோ ம்.
நதிநீர் பங்கீட்டிற்கும் , நாடிணைக்கும்சாலைகட்கும்
எதிராகக்குரல் கொடுக்கும் எத்தர்களுக்கடிமையானோம்.
லட்சக்கணக்கானோர் போராடிப்பெற்ற சுதந்திரத்தின்
லட்சணம் இதுதான் தாயே , லஜ்ஜையின்றிக் கூறுகிறேன்.
இந்தத் தடைகள் நீங்கி , இயல்பான சுதந்திரம் கிடைத்தால்
வந்தே மாதரம் என்று வாழ்த்தி வணங்கிடுவேன் .
சுதந்திர தின வாழ்த்துக்களுடன்
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்
Tags: சுதந்திர தின வாழ்த்து