சித்திரையை வரவேற்போம் !
சித்திரையை வரவேற்போம் !
எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் ..அவுஸ்திரேலியா
உள்ளமெலாம் உவகை கொள
ஊரெல்லாம் மகிழ்ச்சி பொங்க
வெள்ளமென மக்கள் எலாம்
வீதியிலே நிறைந்து நிற்க
உள்ளூரின் கோவில் தனில்
ஊர்வலமாய் தேர் அமர்ந்து
வண்ண மயில் வாகனார்
வடிவாக வலம் வருவார் !
எண்ணம் எலாம் இனிப்பாக
எல்லோரும் இணைந்து அங்கே
இழுத்து நிற்போம் தேரதனை
எங்கள் ஊரே திரண்டுநிற்கும்
புத்தாடை தனை உடுத்தி
புதுத்தெம்பு மனத் திருத்தி
அத்தனை பேர் கைகளுமே
அத்தேரின் வடம் பிடிக்கும் !
எத்தனையே கனவுகளை எல்லோரும் மனத்திருத்தி
ஏங்கிய முகத்தோடு இறைவனையே பார்த்துநிற்பர்
எதிர்காலம் இன்பமாய் இருப்பதற்கு அருளிடென
எம்பெருமான் முருகனது தேரிழுப்பார் எல்லோரும் !
சித்திரையின் தேரோட்டம் சீக்கிரமாய் வரவெண்ணி
அத்தனைபேர் உள்ளங்களும் ஆவலாய் காத்திருக்கும்
முத்திக்கு வித்தான முழுமுதலின் தேரிழுத்தால்
எத்திக்கும் எவர்வாழ்வும் எழிலோங்கி விளங்கிடுமே !
ஊரெல்லாம் கூடிநின்று தேரிழுக்கும் சித்திரையை
உவப்புடனே வரவேற்று உளம்மகிழ்ந்து நின்றிடுவோம்
யாரோடும் பகைகொள்ளா நல்லமனம் தருகவென
மால்மருகன் முருகனிடம் மனமார வேண்டிநிற்போம் !
வெளிநாட்டில் உள்ளவரும் விரும்பித்தேர் இழுக்கின்றார்
வேலவனே வினைதீர்த்து விரும்பியதைக் கொடுத்திடென
சீலமுடன் நாம்வாழ சித்திரையை வரவேற்போம்
ஞாலமதில் நாம்சிறக்க நற்குமரா அருள்தருவாய் !
எத்திக்கு இருந்தாலும் சித்திரையை வரவேற்போம்
அத்தனைபேர் வாழ்வினிலும் ஆனந்தம் பெருகிடவே
சொத்தாக இருக்குமெங்கள் சொந்தங்கள் சேர்ந்திடவே
சித்திரையில் சிரித்தென்றும் சிறப்புடனே இருந்திடுவோம் !
மூத்தோரை அரவணைத்து முத்தங்கள் கொடுத்திடுவோம்
சாத்திரங்கள் பார்த்தாலும் சரியாகச் செயற்படுவோம்
ஏற்றிவைத்த பாரமெல்லாம் இறக்கிவைக்க முயன்றிடுவோம்
எங்கள்வாழ்வில் சித்திரையால் இனிமைவர வேண்டிநிற்போம் !
புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் புதுமைபல பார்த்தாலும்
நலம்விளைக்கும் சித்திரையை நாம்மறத்தல் நன்றல்ல
நமதுகலை பண்பாடு நம்மனத்தில் இருந்துவிடின்
நல்லதொரு சித்திரையை நாளெல்லாம் பார்த்திடலாம் !
சித்திரையில் சிரித்திடுவோம் சிந்தனையை வளர்த்திடுவோம்
அத்தனைபேர் மனங்களிலும் அன்புவரச் செய்திடுவோம்
சத்தியத்தைக் கடைப்பிடிப்போம் சன்மார்க்க வழிசெல்வோம்
சித்திரையைச் சிறப்பாக்க சேர்ந்துநிற்போம் வாருங்கள் !
Tags: சித்திரை